ராசிபுரம், நவ.7: ராசிபுரம் நகராட்சிக்கு குடிநீர் வழங்கும் பிரதான குழாயில் உடைப்பு ஏற்பட்டு உள்ளதால், பழுது நீக்கும் பணி முடியும் வரை, நகராட்சியில் வசிக்கும் மக்களுக்கு லாரிகள் மூலம் தண்ணீர் விநியோகம் செய்யப்படும் என ஆணையாளர் அறிவித்துள்ளார். இதுகுறித்து ராசிபுரம் நகராட்சி ஆணையாளர் நடேசன் வெளியிட்டுள்ள அறிக்கை: ராசிபுரம் நகராட்சிக்கு குடிநீர் வரும் பிரதான குழாய், ஆட்டையாம்பட்டி ஏரியின் அருகில் திருமணிமுத்தாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட போது உடைந்து போனது.
கடந்த 1ம் தேதி முதல் நகராட்சிக்கு குடிநீர் வரத்து தடைபட்டுள்ளது. இதனால் ராசிபுரம் நகராட்சியில் வசிக்கும் பொதுமக்களுக்கு குடிநீர் விநியோகம் வழங்க இயலாத நிலை ஏற்பட்டுள்ளது. குழாய் உடைப்பை சீர்செய்யும் பணிகள், துரித கதியில் நடந்து வருகிறது. இப்பணிகள் முடியும் வரை, ராசிபுரம் நகராட்சி பகுதியில் வசிக்கும் மக்களுக்கு, டேங்கர் லாரி மூலம் குடிநீர் விநியோகம் வழங்கப்பட்டு வருகிறது. இன்று (7ம்தேதி) குழாய் சீரமைப்பு பணிகள் முடிக்கப்பட்டு, குடிநீர் விநியோகம் சீராகும் என தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு அதில் தெரிவித்திருந்தார்.