×

ஆழ்துளை கிணறு மரணத்தை தடுக்க நவீன அறிவியல் கருவிகள்

திண்டுக்கல், நவ. 7: ஆழ்துளை கிணறு மரணங்களை தடுக்க நவீன கருவிகளை பயன்படுத்தி காப்பாற்ற வேண்டும் என தமிழ்ப்புலி கட்சி பொதுக்குழுவில் வலியுறுத்தப்பட்டது.திண்டுக்கல்லில் தமிழ்ப்புலிகள் கட்சியின் மாநில பொதுக்குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. தலைவர் நாகை. திருவள்ளுவன் தலைமை வகித்தார்கூட்டத்தில் ஆழ்துளை கிணறுகள் மற்றும் மலக்குழிகளில் ஏற்படுகின்ற மரணங்களை தடுப்பதற்கு மத்திய, மாநில அரசுகள் நவீன அறிவியல் கருவிகளை பயன்படுத்தி காப்பாற்ற வேண்டும். தமிழகத்தில் புதிய கல்விக்கொள்கையை திணிப்பதற்கு முன்னோட்டமாக 5, 8ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்துவது என்ற தமிழக அரசின் அரசாணையை திரும்ப பெறுவதுடன், மோடி அரசின் காவி கொள்கையை திணிப்பதற்கு ஆளுகின்ற எடப்பாடி அரசு துணைபோவதை நிறுத்த வேண்டும். திருவள்ளுவரை காவிமயமாக்குகின்ற இந்துத்துவ கும்பல்களை வன்மையாக கண்டிக்கிறோம். இந்தியா முழுவதும் மோடி அரசானது தேசிய இனங்கள் மீது பண்பாடு, கலாச்சாரம், பொருளாதாரம், கல்வி உள்ளிட்ட அனைத்து தளங்களிலும் அவர்களின் தனித்தன்மையை சிதைக்கும் விதமாக ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே மதம் என்கிற சர்வாதிகார நடவடிக்கை மேற்கொள்ளும் போக்கை வன்மையாக கண்டிக்கிறோம்.

காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்த்தை அந்த மாநில சட்டமன்றத்தின் ஒப்புதலின்றி ஆளுநரை வைத்தே அரசியலமைப்பு சட்டப்பிரிவு- 370 மற்றும் 35 Aவை நீக்கியது அரசியலைப்பு சட்டத்திற்கும், இந்திய இறையாண்மைக்கும் எதிரானது. பெண்களின் பாதுகாப்பை கேள்விக்குள்ளாக்கி பாலியல் குற்றம் புரிந்த கயவர்களின் மீதான குண்டர் தடுப்புச்சட்டம் ரத்து செய்யப்பட்டதை வன்மையாக கண்டிக்கிறோம். மீண்டும் அவர்களை குண்டர் தடுப்புகாவலில் கைது செய்வதுடன், குற்றச்சாட்டுகளை தகுந்த ஆதாரங்களோடு நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வலியுத்துகிறோம்.வரும் உள்ளாட்சி தேர்தலில் தமிழ்நாட்டில் உள்ள 15 மாநகராட்சிகளில் மேயர் பதவியை இடஒதுக்கீடு மற்றும் சமூகநீதியை பின்பற்றும் விதமாக கோவை மாநகராட்சி மேயர் பதவியை தனித்தொகுதியாக அறிவித்து தலித் மக்களின் பிரதிநிதித்துவம் உள்ளாட்சியில் இருக்கும் விதமாக சமூகநீதியை நிலைநாட்ட வேண்டுமென்று தேர்தல் ஆணையத்தை வலியுறுத்துகிறோம்’ என தெரிவிக்கப்பட்டது.இதில் மத்திய மண்டல செயலாளர் மருதை.போஸ், திண்டுக்கல் மத்திய மாவட்ட துணைச்செயலாளர் இராஜாராம் மற்றும் மாநில, மாவட்ட, நகர, ஒன்றிய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். மாநில துணை செய்தி தொடர்பாளர் ராவணன் நன்றி கூறினார்.

Tags :
× RELATED அரசு பஸ் டிரைவர்களுக்கு சர்க்கரை கரைசல் வழங்கல்