கும்மிடிப்பூண்டி, நவ. 6: பொன்னேரி தாலுகா கூடுவாஞ்சேரி பகுதியை சேர்ந்தவர் சுமன். பொன்னேரியை சேர்ந்தவர் லோகநாதன். தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகின்றனர். இருவரும் கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு இருசக்கர வாகனத்தில் கும்மிடிப்பூண்டி சிப்காட் நோக்கி வந்தனர். அப்போது மர்ம ஆசாமிகள் மடக்கி தங்களுடைய செல்போன்களை கொள்ளையடித்து சென்று விட்டதாக கும்மிடிப்பூண்டி காவல் நிலையத்தில் புகாரளித்தனர். அதன்பேரில் சில தினங்களுக்கு முன்பு சந்தேகத்தின் பேரில் பொன்னேரி பகுதியைச் சேர்ந்த பிரவீன்குமார் (25), விஜய்(21), விக்னேஷ் (25) ஆகிய 3 பேரை கும்மிடிப்பூண்டி போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வந்தனர். இதற்கிடையில் பிரவீன் குமாருடைய மனைவி ஷாலினி, தன்னுடைய கணவரை போலீசார் விசாரணைக்கு அழைத்து சென்றனர். அதன்பிறகு அவர் வீடு திரும்பவில்லை. அவரை மீட்டுதர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கும்மிடிப்பூண்டி குற்றவியல் நீதிமன்றத்தில் மனு கொடுத்ததாக கூறப்படுகிறது.
இதனைத்தொடர்ந்து நேற்று காலை 10 மணியளவில் நீதிபதி அலிஷியா கும்மிடிப்பூண்டி காவல் நிலையத்தில் ஆய்வு செய்தார். அப்போது விசாரணை கைதியாக இருந்த 3 பேரையும் விடுதலை செய்ய உத்தரவிட்டார்.
இதற்கிடையே மேற்கண்ட நபர்கள் பயன்படுத்திய செல்போன் எண்களை வைத்து சோதனை மேற்கொண்டனர். இதில், செல்போன் பறித்தது மேற்குறிப்பிட்ட 3 பேர் என்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து 3 பேர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்து கும்மிடிப்பூண்டி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.