×

சிறுமியிடம் சில்மிஷம் செய்த கார் டிரைவருக்கு 5 ஆண்டு சிறை

சென்னை : சென்னை வடபழனியில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் 11 வயது சிறுமி ஒருவர் பெற்றோர்களுடன் வசித்து வருகிறார். இவர், கடந்த 25.5.2018 அன்று வீட்டின் வெளியே விளையாடிக்கொண்டு இருந்தார். அப்போது, பக்கத்து குடியிருப்பில் கார் டிரைவராக பணிபுரிந்த சாலிகிராமத்தை சேர்ந்த கணேசன் (54) என்பவர், சிறுமியிடம் விளையாடுவதுபோல் நடித்து, சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார்.  இதனால் பயந்துபோன சிறுமி அங்கிருந்து வீட்டிற்குள்ளே சென்றுள்ளார். பின்னர் சில மணி நேரங்கள் கழித்து வெளியே வந்த சிறுமி சக நண்பர்களுடன் விளையாடி வந்துள்ளார். அப்போது, அவர் வைத்திருந்த பந்து ஒரு காரின் கீழே சென்றுள்ளது. அதனை எடுப்பதற்காக சிறுமி, அங்கே சென்றபோது, பின்னே நின்றிருந்த கணேசன் சிறுமியிடம் மீண்டும் தவறாக நடக்க முயன்றுள்ளார். இதனால் சிறுமி அங்கே இருந்து தப்பி ஓடிவிட்டார்.

 பின்னர் இதுகுறித்து பெற்றோர்களிடம் தெரிவித்தார். இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்படி போலீசார் போக்சோ சட்டத்தின் வழக்கு பதிவு செய்து, கணேசனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.இதுதொடர்பான வழக்கு மகளிர் நீதிமன்ற நீதிபதி மஞ்சுளா முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, சாட்சிகளிடம் நடத்தப்பட்ட விசாரணையில் கணேசன் தவறு செய்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே அவருக்கு 5 ஆண்டு சிறை தண்டனையும் 5 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார். மேலும் சிறுமிக்கு அரசு 25 ஆயிரம் இழப்பீடு வழங்கவும் பரிந்துரை செய்து உத்தரவிட்டார்.

Tags : Car driver ,jail ,
× RELATED புழல் சிறையில் பரபரப்பு காவலருக்கு...