கரூர், நவ. 5: கரூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்த மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தி–்ல் கடவூர் தாலுகா தொண்டமாங்கிணம் கடன் வாங்கியூர் மேற்குபகுதியில் வசிக்கும் பொதுமக்கள் அளித்த மனு: ஊரில் நத்தம் இடத்தை சிலர் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். தட்டிகேட்டும் கேட்காமல் முள்வேலி அமைத்து விட்டனர். இதனால் அருகில் உள்ள பெருமாள்கவுண்டம்பட்டி, குப்பாண்டியூரில் அரசு பள்ளிகளுக்கு குழந்தைகள் செல்ல முடியவில்லை. குடிநீர் எடுப்பதற்கு தொட்டிக்கு போக முடியவில்லை. கிராம நிர்வாக அலுவலர் முதல் முதல்வரின் தனிப்பிரிவு வரை மனுக்களை அளித்துள்ளோம்.
கடன்வாங்கியூர் தார்சாலை முதல் லைனான் குளத்துப்பட்டி வரையுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றவேண்டும் என குறிப்பிட்டுள்ளனர். ஆதித்தமிழர் முன்னேற்றக் கழகம் சார்பில் அளித்த மனுவில், ஏமூர் ஊராட்சி ஏமூரில் இருந்து வட்டார போக்குவரத்து அலுவலகம் வரை கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட தார்சாலை பழுதடைந்து குண்டும் குழியுமாக உள்ளது. போக்குவரத்துக்கு பெரும் சிரமமாக இருப்பதால் சாலையை சீரமைக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளனர். இந்துமுன்னணி சார்பில் அளித்த மனுவில், ஆலய நிலங்களை ஆக்கிரமித்தவர்களுக்கே பட்டா செய்து கொடுக்கவும், தனியாருக்கு விற்கவும் தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது. இந்த அரசாணையை ரத்து செய்ய வேண்டும் என குறிப்பிட்டுள்ளனர். இதேபோன்று இந்து மக்கள் கட்சி சார்பிலும் கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது,