மானூர், அக்.31: மானூர் அருகே மின்ஊழியரின் உதவியாளரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தவர் கைது செய்யப்பட்டார். மற்றொருவரைை போலீசார் தேடி வருகின்றனர்.
மானூர் அருகேயுள்ள ரஸ்தா மின்வாரியத்தில் ஹெல்பராக வேலை செய்பவர் ஜெயசங்கர். இவருக்கு அதே ஊரைச் சேர்ந்த பேச்சிமுத்து மகன் மாடசாமி (36) என்பவர் உதவியாளராக வேலை செய்கிறார்.
நேற்று முன்தினம் ஜெயசங்கரும், மாடசாமியும் ரஸ்தா அருகிலுள்ள வெண்கலப்பொட்டல் கிராமத்தில் டிரான்ஸ்பார்மரை ஆப்செய்து செய்துவிட்டு வேலை செய்து கொண்டிருந்தனர்.
அப்போது பட்டவர்த்தியைச் சேர்ந்த குமரேசன் மகன் சுபாஸ்(30) என்பவர் மாடசாமியிடம் போன் செய்து கரண்ட் எப்போது வரும் என்று கேட்டுள்ளார். மாடசாமி அரை மணி நேரத்தில் வரும் என கூறிவிட்டு போனை ஆப் செய்யாமல் சட்டையில் வைத்துவிட்டு அருகில் நின்ற ஜெயசங்கரிடம் போன் செய்த சுபாசை அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது. இதனை எதிர்முனையில் கேட்டுக்கொண்டிருந்த சுபாஸ் கோபமடைந்து தனது நண்பர் அட்டாலி மகன் கனகராஜ்(25) என்பவருடன் மாடசாமி வேலை செய்யும் இடத்திற்கு சென்று தாக்கியதுடன் கொலை மிரட்டலும் விடுத்துள்ளனர். இதுகுறித்து மாடசாமி கொடுத்த புகாரின் பேரில் மானூர் எஸ்.ஐ மாடசாமி, இருவர் மீது வழக்குப்பதிந்து கனகராஜை கைது செய்தார். சுபாஸை தேடி வருகிறார்.