திருச்சி, அக்.31: போராட்டத்தில் ஈடுபடாத அரசு டாக்டர்கள் போராட்டத்தை வாபஸ் பெற்றதாக அறிவிப்பது கண்டனத்துக்குரியது என திருச்சி டாக்டர்கள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. திருச்சி மாவட்டத்தில் நேற்று 6வது நாளாக அரசு டாக்டர்கள் (போக்டா) கூட்டமைப்பினர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இவர்களுக்கு ஆதரவாக பல்வேறு இடங்களில் அரசு ஊழியர்கள், பென்சனர்களும் ஆர்ப்பாட்டம் செய்து வருகின்றனர். நேற்று காலை திருச்சி அரசு மருத்துவகல்லூரி வளாகத்தில் டாக்டர்கள் கூட்டமைப்பினர் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர். தங்களது 4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனர். இந்த போராட்டம் குறித்து திருச்சி அரசு டாக்டர்கள் கூட்டமைப்பின் நிர்வாகி டாக்டர் அருளீஸ்வரன் கூறுகையில், 5 டாக்டர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் நாங்கள், நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப டாக்டர்கள் எண்ணிக்கையை உயர்த்த வேண்டும் என்பது உள்பட 4 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி போராடுகிறோம். 6ம் நாளாக போராட்டம் நடந்து வருகிறது. இந்த நிலையில் சுகாதாரத்துறை அமைச்சர் போராட்டமே நடத்தாத டாக்டர்கள் சங்கத்துடன் பேச்சு வார்த்தை நடத்தி போராட்டம் வாபஸ் என அவர்கள் அறிவித்துள்ளது கண்டனத்துக்குரியது. எங்கள் கூட்டமைப்பில் 13 ஆயிரம் டாக்டர்கள் உள்ளனர். ஸ்டிரைக்கில் இருந்தாலும் அவசர சிகிச்சை, காய்ச்சல் போன்றவற்றை நாங்கள் கவனித்து வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.