×

புதுக்கோட்டை மாவட்டத்தில் திறந்தே கிடக்கும் நூற்றுக்கணக்கான ஆழ்துளை கிணற்றால் உயிருக்கு ஆபத்து

புதுக்கோட்டை , ஆக.31: புதுக்கோட்டை மாவட்டத்தில் மூடப்படாமல் கிடக்கும் நூற்றுக்கணக்கான ஆழ்துளை கிணறுகளை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 12 தாலுகாவிற்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் அரசு மற்றும் தனியார் சார்பில் குடிநீர் மற்றும் விவசாயம் பயன்பாட்டிற்கு இருந்து வந்த ஆழ்குழாய் கிணறுகளில் தண்ணீர் இல்லாததால் தற்போது, பயனற்ற நிலையில் ஆபத்தான முறையில் திறந்த வெளியில் ஆங்காங்கே உள்ளது. ஆலங்குடி தாலுகாவிற்கு உட்பட்ட கொத்தமங்கலம். வடகாடு, கீரமங்கலம். நெடுவாசல், புள்ளான்விடுதி, மாஞ்சான்விடுதி, கொத்தக்கோட்டை, குப்பகுடி, புதுக்கோட்டைவிடுதி உட்பட பல்வேறு பகுதிகளில் விவசாயம் மட்டுமே பிரதான தொழிலாக உள்ளது. இதேபோல் கீரனூர், குண்றன்டார்கோவில், ஆகிய பகுதிகளிலும் விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது.

ஆலங்குடி தாலுகா பகுதியில் ஆற்றுப்பாசனம் மற்றும் ஏரிப்பாசனம் இல்லாததால், வானம் பார்த்த பூமியாகவே விவசாயம் செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில், கடந்த சில ஆண்டுகளாக இப்பகுதிகளில் பருவ மழை முற்றிலும் பொய்த்து போனதால், சுமார் 300 அடி முதல் 500 அடி வரை ஆழமுள்ள ஆழ்துளை கிணறு அமைத்து குடிநீர் மற்றும் விவசாயத்திற்கு பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில், இப்பகுதிகளில் நிலவிய கடும் வறட்சி காரணமாக நிலத்தடி நீர் சுமார் 600 அடி ஆழத்திற்கு சென்று விட்டது. இதனால், பல ஆழ்குழாய் கிணறுகள் பயனற்ற நிலையில் உள்ளன. தனியார் சார்பில் உள்ள பல பயனற்ற ஆழ்குழாய் கிணறுகளும், அரசு சார்பில் குடிநீருக்காக போடப்பட்ட ஆழ்குழாய் கிணறுகளும் தண்ணீர் இல்லாததால் பயனற்ற நிலையில், பாதுகாப்பற்ற முறையில் பல இடங்களில் உள்ளன. புதுக்கோட்டை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பல ஆழ்துளை கிணறுகள் மூடப்படாமல் உள்ளது. மணப்பாறை நடுகாட்டுப்பட்டி சுர்ஜித் இறந்த சம்வத்தையடுத்து ஆலங்குடி, வடகாடு பகுதியில் பல இடங்களில் பொதுமக்கள் தங்களுக்கு தெரிந்த ஆழ்துளை கிணறுகளை மூடி வருகின்றனர். சில இடங்களில் மூடப்படாமல் உள்ளது. மாவட்டத்தில் அனைத்து பகுதிகளியில் நூற்றுக்கணக்கான ஆழ்துளை கிணறுகள் மூடப்படாமல் கிடக்கிறது. இதனால் அசம்பாவிதம் ஏற்படும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Hundreds ,wells ,district ,Pudukkottai ,
× RELATED பத்தமடையில் இடிந்து காணப்படும்...