×

பவானி ஆற்றில் மூழ்கியவர் உடல் 2 நாளுக்குப்பின் கரை ஒதுங்கியது

மேட்டுப்பாளையம்,அக்.31:  கோவை மாவட்டம் அன்னூர் அருகே சாலைபாளையம் விநாயகர் கோவில் வீதியைச் சேர்ந்தவர் பாலமுருகன் (22).  கூலித்தொழிலாளி. இவர் தனது நண்பர்கள் 6 பேருடன் 28ம் தேதி மதியம் சிறுமுகை அருகே வச்சினம்பாளையம் தலைமை நீரேற்று நிலையம் அருகிலுள்ள பவானி ஆற்றுக்கு குளிக்க சென்றார். குளித்து கொண்டிருந்தபோது ஆழமான பகுதிக்கு சென்ற பாலமுருகன் ஆற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டார். இது குறித்து நண்பர்கள் சிறுமுகை போலீசாரிடமும், மேட்டுப்பாளையம் தீயணைப்பு நிலைய அதிகாரிகளிடமும் தகவல் தெரிவித்தனர்.

இதைத்தொடர்ந்து சிறுமுகை சப்-இன்ஸ்பெக்டர் ராஜ்பிரபு தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். மேட்டுப்பாளையம் தீயணைப்பு நிலைய அலுவலர் பாலகிருஷ்ணன் தலைமையில் தீயணைப்பு படை வீரர்களும் பரிசல் மூலம் ஆற்றின் பல இடங்களில் தேடினர்.28ம் தேதி இரவு வரை தேடியும் பாலமுருகன் கிடைக்காததால் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தது. தொடர்ந்து தீயணைப்பு துறையினர் நேற்றுமுன்தினம் காலை முதல் மாலை வரை தேடியும்  பாலமுருகனை கண்டுபிடிக்க முடியவில்லை.இந்நிலையில் நேற்று காலை பாலமுருகனின் உடல் பவானி ஆற்றின் கரையோரம் ஒதுங்கியது. உடலை மீட்ட சிறுமுகை போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர்.

Tags : diver ,Bhavani River ,
× RELATED நீலகிரியில் கனமழையால் பவானி ஆற்றில் தண்ணீர் வரத்து