சாத்தான்குளம், அக். 27: சாத்தான்குளம் அருகே கருங்கடலில் மத்திய அரசு, தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம், மக்கள் தொடர்பு கள அலுவலகம், நெல்லை சார்பில் தூய்மை இந்தியா இயக்கம் குறித்த சிறப்பு விழிப்புணர்வு முகாம் நடந்தது. கள விளம்பர உதவி அலுவலர் போஸ்வெல் ஆசீர் வரவேற்றார். ஆழ்வார்திருநாகரி பிடிஓக்கள் பாக்கியம் லீலா, கருப்பசாமி முன்னிலை வகித்தனர். தூத்துக்குடி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் தனபதி தலைமை வகித்து முகாமை துவக்கிவைத்து பேசினார். அப்போது அவர், ‘‘தூய்மை இந்தியா திட்டத்தின் வெற்றி என்பது அரசு முயற்ச்சி மட்டும் அடங்கியது அல்ல ஒவ்வொரு தனிமனிதனும் இத்திட்டத்தில் கைகோர்த்தால் மட்டுமே வெற்றி நிச்சயம். பிளாஸ்டிக் தவிர்த்தல் குறித்தும் அதனுடைய தீமைகள் குறித்தும் நாம் முழுமையாக தெரிந்துகொண்டு மற்றவர்களுக்கும் எடுத்து சொல்லவேண்டும்.மக்கள் சுயஒழுக்கத்தை கடைபிடிக்கவேண்டும்.
மக்கள் ஒவ்வொரு வீட்டிலும் மழைநீரை சேகரிக்க வேண்டும் இதனால் நிலத்தடிநீர் அதாளபாதாளத்திற்கு செல்வதை கட்டுப்படுத்த முடியும்’’ என்றார்.
இதில் தூய்மை இந்தியா திட்டத்திற்கு மக்களின் பங்களிப்பு குறித்தும், டெங்கு மற்றும் பன்றி காய்ச்சல் குறித்தும் அதிலிருந்து மக்களை பாதுகாக்கும் முறைகள் குறித்தும், பிரதமரின் ஆயுள் காப்பீடு திட்டம், விபத்துக் காப்பீட்டுத் திட்டம் மற்றும் அடல் ஓய்வூதிய திட்டம் குறித்தும் விளக்கமளிக்கப்பட்டது. இதில் ஆழ்வார்திருநாகரி வட்டார மருத்துவ அலுவலர் பார்த்திபன்,தமிழ்நாடு கிராம வங்கியின் நிதிசார் கல்வி ஆலோசகர் மகாலிங்கம் மண்டல துணை பிடிஓ தங்கச்செல்வி, வட்டார தூய்மை பாரத இயக்க ஒருங்கிணைப்பாளர் ரூபக்குமார், விஏஓ செந்தில்
குமார், ஊராட்சி செயலர் முருகேசன், சுய உதவிக்குழு மகளிர் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர். முன்னதாக அனைவரும் தூய்மை இந்தியா இயக்க உறுதிமொழி ஏற்றனர். பின்னர் கோடங்கி கலைக்குழுவினரின் தூய்மை இந்தியா விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் நடந்தன.