விருத்தாசலம், அக். 24: வடகிழக்கு பருவமழை பெய்து வருவதையொட்டி தற்போது தட்பவெப்ப சூழ்நிலை மாறி பலருக்கு டெங்கு காய்ச்சல் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் டெங்கு காய்ச்சலை தடுப்பதற்கான பல்வேறு நடவடிக்கைகளில் சுகாதார துறை ஈடுபட்டு வருகிறது. சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் நிலவேம்பு கசாயம் வழங்கும் நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. இதன் தொடர்ச்சியாக விருத்தாசலம் திரு கொளஞ்சியப்பர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நாட்டு நலப்பணி திட்டம் சார்பில் கல்லூரி மாணவர்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. கல்லூரி முதல்வர் ராஜவேல் தலைமை தாங்கி, நிலவேம்பு கசாயம் வழங்கும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். பேராசிரியர் ஹெலன்ரூத்ஜாய்ஸ் முன்னிலை வகித்தார். இதில் ஏராளமான கல்லூரி மாணவர்கள் கலந்துகொண்டு நிலவேம்பு கசாயத்தை வாங்கி பருகினர். தொடர்ந்து மழைக்காலங்களில் காய்ச்சல் வராமல் பாதுகாத்து கொள்வது பற்றியும், டெங்கு காய்ச்சல் வந்தால் அவற்றை எதிர்கொள்வது பற்றியும் மாணவர்களுக்கு சுகாதார கல்வி விழிப்புணர்வு வழங்கப்பட்டது.