திருவெறும்பூர், அக்.24: துவாக்குடி மாநில உணவக மேலாண்மை பயிற்சி பள்ளி மாணவ, மாணவிகள் சார்பில் தூய்மையே சேவை என்கிற விழிப்புணர்வு முகாம் திருவெறும்பூர் அருகே உள்ள கூத்தைப்பார் மருதீஸ்வரர் கோயில் வளாகத்தில் நடந்தது. இம்முகாமில் துவாக்குடியில் அமைந்துள்ள மாநில உணவக மேலாண்மை பயிற்சி கல்லூரியின் முதல்வர் ஸ்ரீதர், அக்கல்லூரியின் ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் மாவட்ட சுற்றுலா அலுவலர் ஜெகதீஸ்வரி மற்றும் கோயில் பணியாளர்கள் 100 பேர் இணைந்து கோயில் வளாகத்தில் இருந்த பயன்படாத செடி கொடிகள், பிளாஸ்டிக் பொருட்கள், குப்பைகள் உள்ளிட்டவைகளை அகற்றி தூய்மை பணிகளை மேற்கொண்டனர். அதன் பின்னர் குப்பைகள் தரம் வாரியாக பிரிக்கப்பட்டு மக்கும் குப்பை, மக்காத குப்பைகளை பேரூராட்சி ஊழியர்களிடம் வழங்கப்பட்டு அப்புறப்படுத்தப்பட்டது.