அரியலூர், அக். 24: வி.கைகாட்டி அருகில் உள்ள தேளூர்- அயன்ஆத்தூர் சாலையில் ஏற்பட்டுள்ள பள்ளங்களில் மழைநீர் தேங்கி நிற்பதால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். அரியலூர் மாவட்டம் வி.கைகாட்டி- ஜெயங்கொண்டம் நெடுஞ்சாலையில் தேளூர் பிரிவு சாலை முதல் குடிசல், அயன் ஆத்தூர் வரையுள்ள சாலை குண்டும், குழியுமாக போக்குவரத்துக்கு தகுதியற்ற நிலையில் உள்ளது. இந்த சாலையை ஆனந்தாவாடி, அயன் ஆத்தூர், குடிசல் கிராமத்தில் இருந்து தினசரி அன்றாட தேவைக்காக பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர். சாலை சேதமடைந்து நீண்ட காலமாக குண்டும், குழியுமாக உள்ளது. தற்போது சாலையில் ஏற்பட்டுள்ள பள்ளங்களில் மழைநீர் ஆங்காங்கே குளம்போல் தேங்கி நிற்கிறது. இதனால் இந்த சாலையில் பொதுமக்கள் நடந்து கூட செல்ல முடியவில்லை. இந்த சாலையை பொதுமக்கள் தங்களின் அன்றாட தேவைக்காக பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. மேலும் விவசாய பொருட்களை கொண்டு செல்லவும் முடியவில்லை. எனவே சேதமடைந்த சாலையை விரைந்து சீரமைக்க வேண்டுமென மாவட்ட நிர்வாகத்துக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.