விருதுநகர், அக். 23 : திருவண்ணாமலை கலெக்டரை கண்டித்து, விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில், ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்கம் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சங்க மாவட்ட தலைவர் ராஜகோபால் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் பரமேஸ்வரன் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில், ‘திருவண்ணாமலை மாவட்ட கலெக்டரின் அதிகார வன்முறை பேச்சு, ஊரகவளர்ச்சித் துறையில் சாத்தியமில்லாத இலக்குகளை நிர்ணயம் செய்வது, ஊழியர்கள் தெரிவிக்கும் களப்பிரச்சனைகளை கேட்க மறுப்பது, பணி நெருக்கடியால் திணறும் ஊழியர்களை அவமதிப்பதாக கோஷம் எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் அரசு ஊழியர் சங்க மாவட்ட துணைத்தலைவர் கண்ணன், கலெக்டர் அலுலக கிளை செயலாளர் முனியாண்டி உள்ளிட்டோர் சிறப்புரையாற்றினர். வத்றாப்: ஊரக வளர்ச்சித்துறை ஊழியர்களை மிரட்டும் வகையில் பேசிய திருவண்ணாமலை மாவட்ட கலெக்டரை கண்டித்து, வத்திராயிருப்பில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு, ஊரக வளார்ச்சித்துறை மாநில செயலாளர் புகழேந்தி தலைமையில், ஊராட்சி ஒன்றிய அலுவலக ஊழியர்கள் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.