×

பண்டிகை கால விற்பனை சூடுபிடித்திருக்கிறது தரமற்ற உணவு, பலகாரங்கள் வாட்ஸ் அப்பில் புகார் தெரிவிக்கலாம் கலெக்டர் தகவல்

திருவண்ணாமலை, அக்.23:தரமற்ற உணவு பொருட்கள், பலகாரங்கள் விற்பனை குறித்து, வாட்ஸ் அப்பில் பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து திருவண்ணாமலை கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: பண்டிகை காலம் தொடங்கி விட்டதால், அனைத்து விதமான உணவு பொருட்கள் தயாரிப்பு மற்றும் விற்பனை சூடுபிடித்திருக்கிறது. தீபாவளி மற்றும் கிறிஸ்துமஸ் போன்ற பண்டிகை காலத்தில் விதவிதமான இனிப்பு பலகாரங்கள், காரங்கள் மற்றும் கேக் போன்ற பேக்கரி உணவு பொருட்கள் விற்பனை அதிகரிக்கும்.

தீபாவளி பண்டிகையில் இனிப்பு மற்றும் கார பண்டங்களுக்கு சீட்டு நடத்துபவர்கள் உட்பட அனைத்து தயாரிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்களும் உணவு பாதுகாப்புத் துறையில் பதிவு செய்து உரிமம் பெற்றும் பொதுமக்களுக்கு விற்பனை செய்வது கட்டாயமாகும். இனிப்பு மற்றும் பேக்கரி பொருட்கள் தயாரிப்பவர்கள், தரமான மூலப்பொருட்களைக் கொண்டு சுகாதாரமான முறையில் தயாரித்து, பாதுகாப்பான உணவுப் பொருட்களை வழங்க வேண்டும். உணவு தயாரிப்பில் கலப்படமான பொருட்களையோ, அனுமதிக்கப்பட்ட அளவிற்கு அதிகமான நிறமிகளையோ பயன்படுத்தக் கூடாது. பேக்கிங் செய்யப்பட்ட உணவு பொருட்களின் விபரச்சீட்டில், தயாரிப்பாளரின் முழு முகவரி, உணவு பொருளின் பெயர், தயாரிப்பு அல்லது பேக்கிங் செய்யப்பட்ட தேதி, காலவதியாகும் காலம், சைவ மற்றும் அசைவ குறியீடு ஆகியவற்றை அவசியம் குறிப்பிட வேண்டும்.

உணவு பொருட்களை ஈக்கள், பூச்சிகள் மற்றும் கிருமி தொற்று இல்லாத சுகாதாரமான சூழலில் பொதுமக்களுக்கு விற்பனை செய்வது அவசியம். பண்டிகை காலத்தில் மட்டும் பலகாரங்கள் தயாரிப்பவர்கள் உட்பட அனைத்து தயாரிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்களும் உடனடியாக உணவு பாதுகாப்பு அலுவலகத்தினை தொடர்பு கொண்டு இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டத்தின் கீழ் பதிவு செய்து உரிமம் பெற வேண்டும். பண்டிகை காலங்களில் பலகாரங்கள் மற்றும் உணவு பொருட்களை வாங்கும்போது, உணவு பாதுகாப்பு துறையில் பதிவு பெற்ற நிறுவனங்களில் மட்டும் வாங்க வேண்டும். பேக்கிங் செய்யப்பட்ட பொருட்களில் விபரச்சீட்டு இருந்தால் மட்டுமே வாங்கி பயன்படுத்த வேண்டும்.தரமற்ற உணவு பொருட்கள், பலகாரங்கள் விற்பனை செய்வது தெரிந்தால், திருவண்ணாமலை மாவட்ட உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத் துறையின் நியமன அலுவலரிடம் புகார் செய்யலாம். மேலும், 94440 42322 என்ற வாட்ஸ் அப் எண்ணை பயன்படுத்தியும் தகவல் தெரிவிக்கலாம். இவ்வாறு அவர் கூறியிருந்தார்.

Tags : boards ,
× RELATED மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால்...