திருப்புவனம், அக்.17: திருப்புவனம் அருகே பழையனூரில் உள்ள அழகுநாச்சியம்மன் கோயிலில் முளைப்பாரி திருவிழா கடந்த 8ம் தேதி காப்புக் கட்டுதலுடன் தொடங்கியது. தினசரி அம்மனுக்கும், கிராம பரிவார தேவதைகளுக்கும் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றது. நேற்று முன்தினம் முளைப்பாரியை வளர்த்த வீட்டிலிருந்து மந்தையம்மன் கோயிலுக்கு எடுத்துச் சென்றனர். முக்கிய விழாவான முளைப்பாரி ஊர்வலம், நேற்று மந்தையம்மன் கோயிலில் இருந்து புறப்பட்டது. அழகு நாச்சியம்மன் கோயில், கண்மாய் கரை திடல், பெரியநாச்சியம்மன் கோயில், ஊர்க்காவலன் கோயில், சந்தனக் கருப்பு கோயில், முருகன் கோயில், நவநீத பெருமாள் கோயில், மார்க்கண்டயேர் கோயில் உள்ளிட்ட கிராம தேவதைகளின் கோயில்களின் வழியாகவும், முக்கிய வீதிகள் வழியாகவும் வந்த முளைப்பாரி ஊர்வலம் பரிபூரண விநாயகர் கோயில் முன் இறக்கி வைக்கப்பட்டது.
பின்னர் அங்கு விஷேச பூஜைகள் செய்யப்பட்டு கோயில் அருகே உள்ள அய்யா ஊரணியில் முளைப்பாரி கரைக்கப்பட்டது. இதில் பழையனூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமத்திலிருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
முளைப்பாரி ஊர்வலம் திருப்புவனம் புதூர் கிழக்கு தெருவில் உள்ள காளியம்மன் கோயிலில், முளைப்பாரி உற்சவத் திருவிழா கடந்த 8ம் தேதி காப்புக்கட்டுதலுடன் தொடங்கியது. அன்றைய தினம் முத்துப்பதித்தல் நிகழ்வு நடந்தது. 8 நாட்கள் நடந்த இந்த விழாவில், தினசரி அம்மனுக்கு சிறப்பு பூஜை, திருவிளக்கு பூஜையும் நடந்தது. நேற்று முளைப்பாரி ஊர்வலம் நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை புதூர் கிழக்குத்தெரு மற்றும் 8வது வார்டு பொதுமக்கள் செய்திருந்தனர்.