ஊத்தங்கரை, அக்.16: ஊத்தங்கரை தீரன்சின்னமலை பள்ளி சார்பில், டெங்கு ஒழிப்பு மற்றும் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடந்தது. பேரணியை ஊத்தங்கரை எஸ்ஐ சிற்றரசு கொடியசைத்து துவக்கி வைத்தார். பேரணியில் தீரன் சின்னமலை பள்ளியின் தாளாளர் பிரசன்னமூர்த்தி, செயலாளர் தங்கராஜ், எஸ்ஐ அண்ணாமலை மற்றும் முதல்வர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பேரூராட்சி அலுவலர்கள், துப்புரவு பணியாளர்கள் என 1000க்கும் மேற்பட்டோர் கலந்துக்கொண்டு ஊர்வலமாக சென்றனர். ஊத்தங்கரை வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு தொடங்கி பேரணி, நகரின் முக்கிய சாலைகள் வழியாக சென்றது. பேரணியில், காய்ச்சலில் இருந்து பாதுகாக்க குடிநீரை காய்ச்சி குடிக்க வேண்டும், குடியிருப்பு பகுதிகள் மற்றும் பொது இடங்களில் தண்ணீர் தேங்காத வண்ணம் பார்த்துக் கொள்ள வேண்டும், நிலவேம்பு ககசாயம் குடித்தல், பிளாஸ்டிக்கை பயன்படுத்தாமல் இருப்போம் என்பது உள்ளிட்ட விழிப்புணர்வு பதாகைகளை கையில் ஏந்தி ஊர்வலமாக சென்றனர்.