திருவொற்றியூர்: மணலி மண்டலம் சடையங்குப்பம் பகுதியில் துர்நாற்றம் வீசும் குடிநீர் விநியோகம் செய்த அதிகாரிகளை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். சென்னை மாநகராட்சி, மணலி மண்டலம், 16வது வார்டுக்கு உட்பட்ட சடையங்குப்பம், பர்மா நகர் பகுதிகளில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இவர்களுக்கு லாரிகள் மூலம் குடிநீர் வினியோகிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த சில தினங்களாக இப்பகுதிக்கு லாரிகள் மூலம் வழங்கப்படும் குடிநீர் பழுப்பு நிறமாக இருப்பதோடு, துர்நாற்றம் வீசுவதாக கூறப்படுகிறது. இந்த குடிநீரை குடித்தால் தொற்று நோய் பாதிப்பு ஏற்படும் என்பதற்காக பொதுமக்கள், லாரியில் கொண்டு வரப்பட்ட இந்த துர்நாற்றம் வீசிய குடிநீரை பிடிக்காமல் திருப்பி அனுப்பியதோடு, சுகாதாரமான குடிநீரை வழங்க வேண்டும், என்று மணலி மண்டல குடிநீர் வழங்கல் துறை அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்தனர்.
ஆனால், அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. மேலும், கடந்த 4 தினங்களாக இப்பகுதிக்கு குடிநீர் வினியோகிக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் நேற்று காலை சடையங்குப்பம் பகுதியில் திரண்டு, சுகாதாரமான குடிநீர் வழங்காத குடிநீர் வழங்கள் வாரிய அதிகாரிகளை கண்டித்து காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவலறிந்த சாத்தாங்காடு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, சுகாதாரமான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதையேற்று பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.