சென்னை: எலும்பு மஜ்ஜையில் உருவாகும் மைலோமா என்ற ஒருவகை ரத்த புற்றுநோய் குறித்த “மியாட் மைலோமா 2019” என்ற ஒருநாள் விழிப்புணர்வு கருத்தரங்கம் மணப்பாக்கத்தில் உள்ள மியாட் சர்வதேச மருத்துவமனையில் நேற்று நடந்தது. மியாட் மருத்துவமனை தலைவர் மல்லிகா மோகன்தாஸ் தலைமை வகித்தார். குருதியியல், புற்றுநோயியல், எலும்பு மஜ்ஜை மாற்றுதல் போன்ற துறைகளில் சிறந்து விளங்கும் தமிழக முன்னணி மருத்துவர்கள் பலர் கலந்து கொண்டனர். இந்த கருத்தரங்கம் குறித்து அமெரிக்காவில் உள்ள மேயோ மருத்துவமனை டாக்டர் வின்சென்ட் ராஜ்குமார், ரத்த புற்றுநோயியல் துறைத்தலைவர் டாக்டர் செழியன் சுபாஷ், மைலோமா துறை நிபுணர் கிஷோர் குமார், மியாட் மருத்துவ மனையின் தலைவர் மல்லிகா மோகன்தாஸ் ஆகியோர் நிருபர்களிடம் கூறியதாவது:
எலும்பு மஜ்ஜையில் உருவாகும் ஒரு வகை ரத்த புற்றுநோயைத்தான் மைலோமா என்று அழைக்கிறோம். மைலோமா என்னும் புற்று நோய் உலகில் 2வது இடத்தில் உள்ளது. இந்தநோய் ஆண்களுக்கு அதிகமாக உள்ளது. முதலில் கைகால் வலி, முதுகு வலி எனதொடங்கும். இந்த நோய் எலும்பு மஜ்ஜைகளில் தங்கி எலும்புகளை வலுவிழக்க செய்யும். சிறு காயம் ஏற்பட்டாலே எலும்புகள் உடையும். சிறுநீரக இழப்பும் ஏற்படும். இந்திய அளவில் ஆண்டிற்கு 20 ஆயிரம் பேர் இந்த நோயினால் பாதிக்கப்படுகிறார்கள். இந்நோய்க்கு வழக்கமான கீமோ தெரபி முறையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இதில் ரத்த அணுக்களின் உற்பத்தி பாதிக்கப்பட்டு வெள்ளை அணுக்கள், மற்றும் சிவப்பு அணுக்களின் எண்ணிக்கை குறைந்து விடுகிறது.
கடந்த 5 ஆண்டுகளில், இந்த மைலோமா நோய் சிகிச்சை முறையில் மிகப்பெரிய மாற்றங்கள் எற்பட்டுள்ளது. இதன்மூலம் ‘நோவல் எஜென்ட் காம்பினேஷன் தெரபி’ என்ற முடிவிழுதல் தடுப்பு, எலும்பு மஜ்ஜை மாற்றம், வாய்ப்புண், மற்றும் ரத்த எண்ணிக்கை குறையாமல் தடுத்தல், இந்த சிகிச்சையால் நீண்ட நாள் உயிர் வாழ்தல் போன்ற பக்க விளைவுகள் இல்லாத சிகிச்சை முறை அளிப்பது எளிதாக்கப்பட்டுள்ளது. மைலோமா சிகிச்சை முறையின் ஏற்றுக்கொள்ளப்பட்ட சர்வதேச நாடுகளில் உள்ள எலும்பு மஜ்ஜை மாற்று மையங்களில் மியாட் மருத்துவ மனையும் ஒன்று. இது வரை 100 மைலோமா மாற்று சிகிச்சை வெற்றிகரமாக நடந்துள்ளது. வெளிநாடுகளை விட 30 சதவீதம் கட்டணம் குறைவாகவே உள்ளது. இவ்வாறு தெரிவித்தனர்.