நாமக்கல், அக்.10:நாமக்கல் அருகேயுள்ள கொசவம்பட்டியை சேர்ந்தவர் பொன்னுசாமி. இவரது மகள் பிரியங்கா (19). நாமக்கல் அருகே உள்ள தனியார் கல்லூரியில் 2ம் ஆண்டு படித்து வந்தார். அதே கல்லூரியில் படிக்கும் ஒரு மாணவரை, பிரியங்கா காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று இரவு இருவரும், என்.கொசவம்பட்டி ரோஜா நகரில் உள்ள ஒரு கிணற்றின் அருகே நின்று பேசிக்கொண்டிருந்தனர். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த பிரியங்கா, திடீரென கிணற்றில் குதித்தார்.
இதில் தண்ணீரில் மூழ்கிய அவர் சிறிது நேரத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த தகவல் அறிந்து, சம்பவ இடத்துக்கு வந்த நாமக்கல் தீயணைப்பு நிலைய அலுவலர் பொன்னுசாமி, எஸ்ஐ பூபதி மற்றும் போலீசார், கிணற்றில் கிடந்த பிரியங்கா உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து போலீசார் வழக்குபதிவு செய்து மாணவரிடம் விசாரித்து வருகிறார்கள்.