×

அரசு ஐ.டி.ஐ.,களில் மாணவர் சேர்க்கை கால அவகாசம் 11ம் தேதி வரை நீட்டிப்பு

ஊட்டி, அக்.4: குன்னூர், கூடலூரில் உள்ள அரசு ஐ.டி.ஐ.,களில் நேரடி மாணவர் சேர்க்கைக்கான கால அவகாசம் வரும் 11ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. குன்னூரில் உள்ள அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் பல்வேறு தொழிற் பிரிவுகளில் 2019ம் ஆண்டிற்கான நேரடி சேர்க்கைக்கான கால அவகாசம் வரும் 11ம் தேதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. இதில் முதலில் வருவோருக்கு முன்னுரிமை வழங்கப்படும். 14 வயது பூர்த்தி அடைந்த ஆண், பெண் இருபாலரும் விண்ணப்பிக்கலாம். உச்ச வயது வரம்பு 40 ஆகும். பெண்களுக்கு வயது வரம்பு இல்லை. குன்னூர் அரசு ஐ.டி.ஐ.,யில் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் பிட்டர், டர்னர், கம்மியர் (குளிர் பதனம்), கம்மியர் (மின்னணுவியல்), கார்பென்டர் மற்றும் வெல்டர் ஆகிய பிரிவுகளுக்கு விண்ணப்பிக்கலாம். அனைத்து பிரிவுகளை சார்ந்த மாணவர்களும் நேரடி சேர்க்கையின் மூலம் சேர மதிப்பெண் சான்று, டி.சி., சாதி சான்று, ஆதார், ஆகியவற்றின் அசல் மற்றும் 10 புகைப்படம் ஆகியவற்றுடன் நேரில் பங்கேற்கலாம்.

ேமலும் பழங்குடியினருக்காக கூடலூரில் இயங்கும் அரசு ஐ.டி.ஐ.,யில் பிட்டர், கம்மியர் மோட்டார் வண்டி, வெல்டர், பிளம்பர் ஆகிய தொழிற் பிரிவுகளுக்கு 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற பழங்குடியின வகுப்பை சேர்ந்த மாணவ, மாணவியர்கள் அசல் சான்றிதழ்களுடன் நேரில் அணுகலாம். மேலும் விவரங்களுக்கு 0423-2231759, 0426-2263449 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு அறிந்து கொள்ளலாம்.

Tags :
× RELATED மஞ்சூரில் பணிமனையுடன் பேருந்து நிலையம் அமைக்க கோரிக்கை