மேட்டூர், அக்.4: மண் அரிப்பால் சிதிலமடைந்த பாலமலை சாலையை சீரமைத்து தர விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். கொளத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ளது பாலமலை ஊராட்சி.செங்குத்தான மலை உச்சியில் 33 குக்கிராமங்களை கொண்டுள்ளது. கடந்த உள்ளாட்சி தேர்தலுக்கு பிறகு, தேசிய ஊரக வேலை உறுதி அளிப்பு திட்டத்தின் கீழ், 7 கிமீ தொலைவிற்கு மண் சாலை அமைக்கப்பட்டது. இந்த மண் சாலையை தார் சாலையாக மாற்ற பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. ஆனால் இது வரை எவ்வித நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இந்நிலையில்,கடந்த வாரத்தில் பெய்த கனமழையால் மண் அரிப்பு ஏற்பட்டு பாலலை சாலை குண்டும், குழியுமாக மாறி நீரோடையாக காட்சி தருகிறது. இதில் டூவீலர்கள், கார் மற்றும் ஜீப் உள்ளிட்ட வாகனங்களில் செல்ல கடும் சிரமம் ஏற்பட்டது. இதனால் பாலமலை மக்கள் தங்கள் அத்தியாவசிய தேவைக்காக உணவு பொருட்கள் வாங்கவும். மருத்துவ வசதிக்காக கொளத்தூர், கண்ணாமூச்சி பகுதிக்கு வரமுடியாமல் அவதிக்குள்ளாகி வருகின்றனர். அதே போல், உயர் கல்வி படிக்கும் கல்லூரி மாணவ, மாணவிகள் காலை மற்றும் மாலையில் உரிய நேரத்திற்கு மலையடிவாரத்தில் வந்து, பஸ்களில் ஏறி செல்ல முடியாமல் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, உடனடியாக பாலமலை மண் சாலையை தார்சாலையாக மாற்ற வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.