×

மழைக்காலத்தில் நடப்பதால் குடிமராமத்து பணியில் முறைகேடு விவசாயிகள் புகார்

சிவகங்கை, செப்.4:  சிவகங்கை மாவட்டத்தில் மழைக்காலத்தில் நடந்து வரும் குடிமராமத்து பணி கண்துடைப்பாக செய்யப்பட்டு பில் எடுத்து வருவதாக புகார் எழுந்துள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் குடிமராமத்து பணியில் பராமரிப்பு செய்ய பெரியாறு கால்வாய்களான சீல்டு கால்வாய்க்கு ரூ.1.47 கோடி, 48 கால்வாய்க்கு ரூ.3 கோடி, லெஸ்சிஸ் கால்வாய்க்கு ரூ.65 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதுபோல் மாவட்டம் முழுவதும் 109 கண்மாய்களை குடிமராமத்து பணிகள் மூலம் சீர் செய்ய ரூ.39.22 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த இரண்டு பணிகளும் பொதுப்பணித்துறையின் கீழ் செய்யப்படுகின்றன. ஊரகவளர்ச்சித்துறை சார்பில் குடிமராமத்து பணி திட்டத்தில், ரூ.35 கோடி மதிப்பீட்டில் 300 குளங்கள், ஊரணிகள் சீரமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. குடி மராமத்து பணிகள், விவசாயிகள் நீர்ப்பாசன சங்கம் அமைத்து அதன் மூலம் செய்யப்பட வேண்டும். ஆனால் அவ்வாறு இல்லாமல் ஆளும் கட்சியினர் தலையீட்டில் போலி விவசாய சங்கங்கள் அமைக்கப்பட்டு பணிகள் நடந்து வருகின்றன. ஊரக வளர்ச்சித்துறை சார்பில் செய்யப்படும் குடிமராமத்து பணி ஏராளமான ஊர்களில் ஊராட்சி செயலர் பெயரில் நடக்கிறது. இதில் ஒரு பணிக்கு நான்கில் ஒரு பங்கை ஆளும் கட்சியினர், அதிகாரிகள் கமிசனாக பெற்றுக்கொண்டு யாரை வேண்டுமானாலும் பணி செய்ய அனுமதித்துள்ளனர்.

இதனால் விவசாய சங்கங்கள், விவசாயிகள் மேற்பார்வையில் இல்லாமல் பெரும்பாலும் காண்ட்ராக்டர்களே பணிகளை செய்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த ஒரு மாதமாக மழை பெய்து வருகிறது. இதே காலகட்டத்தில்தான் கண்மாய், குளங்களும் குடிமராமத்து பணியில் சீரமைக்கப்படுகின்றன. கண்மாய், குளங்களில் நீர் இருக்கும் போதோ அல்லது ஈரத்துடன் களி மண்ணாக இருக்கும் போதோ எப்படி மராமத்து பணி செய்ய முடியும். முறைகேடாக நடக்கும் இப்பணிகளால் குடிமராமத்து பணியின் நோக்கமே கேள்விக்குறியாகியுள்ளது. பணிகளும் முழுமையாக இல்லாமல் பெயரளவில் மட்டுமே செய்துவிட்டு பில் பாஸ் செய்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. விவசாய சங்க நிர்வாகிகள் கூறியதாவது: குடிமராமத்து பணிகள் என்பதே விவசாயிகள் பங்களிப்போடு இருக்க வேண்டும் என்பதால் விவசாயிகளே சங்கம் அமைக்க வேண்டும். அதன் மூலம் பணிகள் செய்ய வேண்டும் என அரசு விதிமுறை உள்ளது. ஆனால் அவ்வாறு செய்யப்படவில்லை. மழைக்காலத்தில் இப்பணிகள் நடப்பதே கண்துடைப்பாக செய்துவிட்டு பில் எடுப்பதற்காகவோ என்ற சந்தேகம் எழுந்தது. தற்போது அதை உறுதி செய்வது போல் பணிகள் பெயரளவில் நடந்து வருகிறது. பணிகள் முழுமையாக நடந்ததா என்பதை ஆய்வு செய்துவிட்டே பில் பாஸ் செய்ய வேண்டும். இல்லையெனில் பில் பாஸ் செய்யக்கூடாது. 80கோடி ரூபாய் பணிகளில் பல கோடி ரூபாய் முறைகேடு நடக்க வாய்ப்புள்ளது. அதை தடுக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Tags :
× RELATED மஞ்சுவிரட்டு நடத்திய 6 பேர் மீது வழக்கு