×

திருப்போரூர் அருகே பரபரப்பு டிரைவரை கத்தியால் குத்தி கார் கடத்தல்

திருப்போரூர், அக்.2: திருப்போரூர் அருகே டிரைவரை கத்தியால் குத்திவிட்டு காரை கடத்தி சென்ற மர்மநபரை, போலீசார் வலை வீசி தேடிவருகின்றனர். கடலூர் மாவட்டம் லத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் மஞ்சமுத்து. இவரது மகன் ராமு (31). சென்னையில் தங்கி தனியார் நிறுவனத்தில், தனக்கு சொந்தமான காரை வாடகை அடிப்படையில் ஓட்டி வருகிறார். இந்நிலையில், நேற்று முன்தினம் மதியம் ராமு, சென்னை கோயம்பேடு பஸ் நிலையத்தில் இருந்து புதுச்சேரிக்கு வாடிக்கையாளரை அழைத்து சென்றார். அங்கிருந்து சென்னை செல்ல புதுச்சேரி பஸ் நிலையத்தில் காத்திருந்தார். அப்போது அவரது மொபைல் ஆப்பில் அழைப்பு வரவில்லை. இதையடுத்து, பஸ் நிலையத்தில் காத்திருந்த சிலரை சென்னைக்கு காரில் வருமாறு அழைத்தார். அப்போது ஒருவர், கேளம்பாக்கம் வரை செல்வதாக கூறியுள்ளார். இதையடுத்து,  அவரை மட்டும் காரில் ஏற்றி கொண்ட ராமு, சென்னைக்கு புறப்பட்டார்.

இரவு 11 மணியளவில் திருப்போரூர் அருகே காலவாக்கத்தில் கார் சென்று கொண்டிருந்தபோது, காரில் வந்தவர் திடீரென மறைத்து வைத்திருந்த கத்தியை காட்டி மிரட்டி,  ராமுவிடம் காரை நிறுத்தும்படி கூறியுள்ளார். இதனால், அதிர்ச்சியடைந்த அவர், காரை நிறுத்தியதும், அவரது கையில் கத்தியால் குத்தி கீழே தள்ளிவிட்டு காரை கடத்தி எடுத்து கொண்டு வேகமாக சென்றார். ரத்தம் சொட்ட, சொட்ட கார் உரிமையாளர் ராமு, அவ்வழியே சென்ற வாகனங்களை மடக்கி உதவி கேட்டு திருப்போரூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து கடத்தி செல்லப்பட்ட காரையும், கடத்தல் வாலிபரையும் தேடி  வருகின்றனர்.

Tags : car driver ,
× RELATED விபத்தில் வாலிபர் பலி கார் டிரைவருக்கு ஓராண்டு சிறை