×

திருமணி முத்தாற்றில் மீண்டும் வெள்ளப் பெருக்கு தரைப்பாலம் உடைந்ததால் கிராமங்கள் துண்டிப்பு

ராசிபுரம், செப்.25: வெண்ணந்தூர் அருகே, திருமணி முத்தாற்றில் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் தரைப்பாலம் உடைந்தது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூர் அடுத்த மதியம்பட்டி பகுதியில் திருமணிமுத்தாறு செல்கிறது. இதில், சேலம் மாவட்டம் ஏற்காடு மலை அடிவாரத்தில் உற்பத்தியாகும் திருமணிமுத்தாறு சேலம் மாவட்டத்தின் பல்வேறு வழியாக சென்று நாமக்கல் மாவட்டத்தில் நன்செய் இடையாறு அருகே காவிரி ஆற்றில் கலக்கிறது. நேற்று முன்தினம் சேலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கன மழை பெய்தது. இதனால் திருமணி முத்தாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. ஆற்றில் அடிக்கடி வெள்ளப்பெருக்கு ஏற்படுவதால் மதியம்பட்டி செளரிபாளையம் இடையே உயர்மட்ட பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதனால், தற்காலிக பாலம் அமைக்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில், ஆற்றில் வெள்ளப்பெருக்கு அதிகரித்ததால் மதியம்பட்டி- சௌரிபாளையம் இடையே அமைக்கப்பட்டிருந்த தரைப்பாலமானது வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது.  இதனால் மதியம்பட்டி, சௌரிபாளையம், கல்கட்டானூர், பொரசபாளையம் உள்ளிட்ட 4 கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் பள்ளி கல்லூரி செல்லும் மாணவ மாணவிகளும், பணிக்குச் செல்பவர்களும் 5 கி.மீட்டர் தூரம் சுற்றிக்கொண்டு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது.
எனவே, மழைக்காலத்தில் இது போன்ற நிகழ்வினை தவிர்க்க விரைவில் திருமணிமுத்தாற்றில் தூர்வாரும் பணியை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள், விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : villages ,flooding ,
× RELATED குடிநீர், சாலை வசதி இல்லை எனக்கூறி தேர்தலை புறக்கணித்த கிராம மக்கள்