உடன்குடி, செப். 25: அத்தியடிதட்டு முத்தாரம்மன் கோயில் கொடைவிழாவை முன்னிட்டு நடந்த பால்குட ஊர்வலத்தில் பக்தர்கள் திரளாகப் பங்கேற்றனர். உடன்குடி அருகே அத்தியடிதட்டு முத்தாரம்மன் கோயிலில் ஆண்டுதோறும் புரட்டாசி கொடைவிழா விமரிசையாக நடந்து வருகிறது. இதன்படி இந்தாண்டுக்கான கொடைவிழா கோலாகலமாக நடக்கிறது. இதை முன்னிட்டு நேற்று (24ம் தேதி) காலை 8 மணிக்கு வில்லிசை, 9 மணிக்கு பழையகாயல் மூவாற்றங்கரை பகுதியில் இருந்து புனிதநீர் எடுத்து வருதல் நடந்தது. முற்பகல் 11 மணிக்கு தூத்துவாலை அய்யனார் கோயிலில் இருந்து 108 பால்குட ஊர்வலம் துவங்கியது. இதில் பெண்கள் உள்ளிட்ட பக்தர்கள் திரளாகப் பங்கேற்றனர். முன்னதாக தூத்துவாலை அய்யனார், பேச்சியம்மன் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு சிறப்பு வழிபாடு நடந்தது. பால்குட ஊர்வலம் கோயிலை வந்தடைந்ததும் தொடர்ந்து அம்மனுக்கு பாலாபிஷேகம் முதலான பல்வேறு அபிஷேகமும், அதைத்தொடர்ந்து அலங்கார தீபாராதனையும் நடந்தது.
மாலை 6மணிக்கு திருவிளக்கு பூஜை, இரவு 7.30 மணிக்கு 1008 அகல் விளக்கு வழிபாடு, தீபாராதனை, 12 மணிக்கு சிறப்பு அலங்கார பூஜையை தொடர்ந்து முளைப்பாரி ஊர்வலம் நடந்தது. இன்று (25ம் தேதி) காலை 9 மணிக்கு வில்லிசை, மதியம் 1 மணிக்கு உச்சிக்கால பூஜை, மஞ்சள் நீராட்டு, இரவு 10மணிக்கு சிவச்சந்திரன் குழுவினரின் பக்தி இன்னிசை, மறுநாள் அதிகாலை 1.30மணிக்கு அலங்கார பூஜை நடக்கிறது.
ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.