×

காளையார்கோவில் சொர்ணகாளீஸ்வரர் தெப்பக்குளம் சுற்றுச்சுவரை உயர்த்த வேண்டும் பக்தர்கள் வலியுறுத்தல்

காளையார்கோவில், செப்.25:  காளையார்கோவில் சொர்ணகாளீஸ்வரர் ஆலய தெப்பக்குளம் சுற்றுச்சுவரை உயர்த்தி கட்ட வேண்டும் என பக்தர்கள் வலியுறுத்தி உள்ளனர். காளையார்கோவிலில் உள்ள வரலாற்று சிறப்பு மிக்க சொர்ணகாளீஸ்வரர் ஆலயத்தின் தெப்பக்குளம் சுமார் 11 ஏக்கர் பரப்பளவைக் கொண்டது. குளத்தின் நடுவில் 1 ஏக்கர் பரப்பளவில் மையமண்டபம் அமைந்துள்ளது.  ஒவ்வொரு ஆண்டும் வைகாசி மாதம் தெப்பத்தேர் இழுக்கப்படும். இவ்விழாவை காண 100க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருவதுண்டு. கடந்த நான்கு ஆண்டுகளுக்கு மேல் போதிய மழையில்லாமலும் நீர்வரத்து கால்வாய் ஆக்கிரமிப்பாலும் தெப்பம் வற்றிய நிலையில் உள்ளது. மேலும் தெப்பக்குளத்தைச் சுற்றிலும் ரோடுகள் உயர்த்தப்பட்டுள்ளதால் கைப்பிடிச் சுவரின் உயரம் குறைந்துவிட்டது. இதனால் பெரியவர்கள் மற்றும் குழந்தைகள் நிலைதடுமாறி தெப்பக்குளத்திற்குள் விழக்கூடிய நிலை உள்ளது. மேலும் மிகமிக தாழ்வாக கைப்பிடிச்சுவர் இருப்பதினால் வாகனங்கள் எளிதாக குளத்திற்குள் சென்று விபத்தை ஏற்படுத்தக்கூடிய நிலை உள்ளது.

கனரக வாகனங்கள் கைப்பிடி சுவற்றின் ஓரமாக செல்வதால், சுவர் இடிந்து தெப்பக்குளத்திற்குள் விழுந்து விடுகின்றன. வரலாற்றுச் சிறப்புமிக்க தெப்பக்குளத்தை பாதுகாக்கும் வகையில் சுற்றியுள்ள கைப்பிடி சுவற்றின் உயரத்தை அதிகரிக்க வேண்டும். கனரக வாகனங்கள் நிறுத்துவதை தடுக்கவேண்டும். மேலும்  காலை மற்றும் மாலை வேளைகளில் பொதுமக்கள், சிறுவர்கள் நடைப்பயிற்சி செய்யும் வகையில் தெப்பக்குளத்தைச் சுற்றி பூங்கா அமைத்து தரவேண்டும். வரும் காலங்களில் மழைநீர் தெப்பக்குளத்திற்கு வரும் வகையில் ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மக்கள் கூறுகையில், கடந்த 2018ம் ஆண்டு சிவகங்கையில் நடைபெற்ற எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் காளையார்கோவில் தெப்பக்குளத்தைச் சுற்றியுள்ள கைப்பிடி மதில் சுவர் உயர்த்தி தரப்படும் என்று தமிழக முதல்வர் அறிவித்திருந்தார். இன்று வரை அதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. நீர்ஆதாரத்தை காக்கும் வகையில் அறிவிக்கப்பட்ட முதல்வரின் வாக்குறுதி என்னாச்சு என்று கேள்வி எழுப்பினர்.

Tags : Devotees ,Sornakaliswara ,Kaliyariko ,
× RELATED திருவண்ணாமலையில் சித்ரா பவுர்ணமி...