முத்துப்பேட்டை, செப். 24: முத்துப்பேட்டை வட்டார ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டத்தின் சார்பில் போஷான்மா மாதம் கடைபிடிக்கும் விதத்தில் முத்துப்பேட்டை வட்டாரத்தில் பல்வேறு பகுதிகளில் இயங்கும் அங்கன்வாடி மையங்களில் ஊட்டச்சத்து திருவிழா நடைபெற்றுவருகிறது. அதன்படி நேற்று முத்துப்பேட்டை தனியார் மேல்நிலைப்பள்ளியில் ஊட்டச்சத்து உணவு திருவிழா மற்றும் கண்காட்சி நடைபெற்றது.நிகழ்ச்சிக்கு வட்டார திட்ட அலுவலர்(பொ) கண்ணகி தலைமை வகித்தார்.பள்ளி தாளாளர் மற்றும் தலைமையாசிரியர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மாணவிகளுக்கு ஊட்டசத்துகளின் அவசியம், பயன்கள், இரும்பு சத்து நிறைந்த பழங்கள், காய்கறிகள், கீரைகள், தாணியங்கள் குறித்தும், வைட்டமின் ஏ திரவம், குடல்புழு மாத்திரைகள் உண்ணுவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
மேலும் வளர இளம் பெண்களுக்கு அங்கன்வாடி மையங்கள் மூலம் சுகாதார கல்வி மற்றும் வைட்டமின் மாத்திரைகள் வழங்கப்படுகிறது. மேலும் மருத்துவ பரிசோதனை, ஆலோசனைகள் வழங்கப்படுகிறது. அதை மாணவிகள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அனைவரும் ஊட்டச்சத்து குறித்த உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். நிகழ்ச்சியில் அங்கன்வாடி பணியாளர்கள், ஆசிரியைகள் கலந்துகொண்டனர்.