தூத்துக்குடி, செப். 24: சாயர்புரத்தில் வீதிகள் ஆக்கிரமிப்பால் அவதிப்படும் மக்கள் அகற்ற வலியுறுத்தியுள்ளனர். இதுகுறித்து, சாயர்புரம் சாராக் தெரு பொதுமக்கள் கலெக்டரிடம் கொடுத்துள்ள மனு:சாயர்புரம் பேரூராட்சிக்கு உட்பட்ட சாராக் தெருவில் 60க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வாழ்ந்து வருகின்றனர். இந்த தெருவிலுள்ளவர்களில் பெரும்பாலானவர்கள் நெசவு தொழிலாளர்கள் என்பதால் நெசவு வேலைக்குரிய நூல்களை பசை போடுதல், பாவு ஆத்துதல் போன்ற பணிகளை இந்த தெருவில் வைத்தே காலகாலமாக செய்து வருகின்றனர்.
கிறிஸ்துமஸ், புத்தாண்டு காலங்களில் இந்த தெருவில் வைத்துதான் சிறுவர்-, சிறுமியர்களுக்கான விளையாட்டு போட்டிகளும் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்த தெருவில் கடை வைத்துள்ளவர்கள் சிலர் தற்போது தங்களது கடைகளுக்கு முன்பாக மண் போட்டு உயர்த்தி தெருவை ஆக்கிரமித்துள்ளனர். வீதிகளில் இதுபோன்று தொடர்நது ஆக்கிரமிப்பு அதிகரித்து வருகிறது. இதுகுறித்து பேரூராட்சியில் அளித்த புகாரின்பேரில் ஆக்கிரமிப்பு செய்தவர்கள் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதாக உறுதி அளித்தனர். இருந்தபோதும் அவற்றை அகற்றாமல் இருந்து வருவதால் தெருவில் பொதுமக்கள், மாண, மாணவியர்கள் சென்றுவருவதற்கு இடையூறாக இருப்பதுடன், மழைக்காலங்களில் மழைநீர் அருகிலுள்ள பள்ளி மற்றும் வீடுகளுக்குள் புகுந்திடும் நிலையும் உள்ளது. எனவே தெருவிலுள்ள ஆக்கிரமிப்புகளை துரிதமாக அகற்றிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியுள்ளனர்.