பழநி, செப். 15: பாலசமுத்திரம் அகோபில வரதராஜ பெருமாள் கோயிலில் ஆவணி பிரமோற்சவ விழா திருக்கல்யாண நிகழ்ச்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.பழநி அருகே பாலசமுத்திரத்தில் அகோபில வரதராஜ பெருமாள் கோயில் உள்ளது. பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள இக்கோயிலில் ஆண்டுதோறும் ஆவணி பிரமோற்சவ விழா விமரிசையாக கொண்டாடப்படும். 11 நாட்கள் நடைபெறும் இவ்விழா வரும் கடந்த 8ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.
முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாணம் நேற்றிரவு நடந்தது. இதையொட்டி ஸ்ரீதேவி, பூதேவி சமேத அகோபில வரதராஜ பெருமாளுக்கு 16 வகை அபிஷேகம், சிறப்பு அலங்காரம் நடந்தது.தொடர்ந்து பட்டாடை அணிவிக்கப்பட்டு பக்தர்களின் கோவிந்தா கோஷம் முழங்க மாங்கல்யம் அணிவிக்கும் நிகழ்ச்சி நடந்தது. பின்னர் அப்பளம் உடைத்தல், மாலை மாற்றுதல் போன்ற திருமண சடங்கு நிகழ்ச்சிகள் நடந்தன. பக்தர்களுக்கு மஞ்சள் கயிறு, குங்குமம், வளையல் போன்ற பொருட்கள் பிரசாதமாக வழங்கப்பட்டன. இதில் பழநி கோயில் இணை ஆணையர் செல்வராஜ், துணை ஆணையர் செந்தில்குமார், மேலாளர் உமா, கண்காணிப்பாளர் நெய்க்காரப்பட்டி முருகேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இன்று (ஞாயிறு) இரவு பாரிவேட்டை நிகழ்ச்சி நடக்கிறது. முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நாளை (திங்கள்) காலை 9 மணிக்கு துலா லக்னத்தில் நடக்க உள்ளது. 17ம் தேதி இரவு கொடியிறக்க நிகழ்ச்சி நடக்கிறது. 18ம் தேதி மாலை விடையாற்றி உற்சவத்துடன் விழா முடிவடைகிறது. விழா நடைபெறும் 11 நாட்களும் கோயில் வளாகத்தில் பக்தி இன்னிசை, பக்திச் சொற்பொழிவு, கலை நிகழ்ச்சிகள், பாசுரங்கள் சேவித்தல் போன்ற கலை நிகழ்ச்சிகள் நடக்க உள்ளன.