அரியலூர், செப். 10: அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே உள்ள தெற்கு புதுக்குடி கிராமத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென குறைதீர் கூட்டத்தில் பொதுமக்கள் மனு அளித்தனர். அரியலூர் கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர் கூட்டம் நடந்தது. கலெக்டர் வினய் தலைமை வகித்து பொதுமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் அளித்த 1,008 கோரிக்கை மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். தெற்கு புதுக்குடி கிராம மக்கள் அளித்த மனு: போக்குவரத்து வசதிகள் இல்லாத வடக்கு புதுக்குடி கிராமத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க இருப்பதாக கூறப்படுகிறது. அப்படி சுகாதார நிலையம் அங்கு அமைந்தால் அனைத்து தரப்பினரும் பல இன்னலுக்கு ஆளாக நேரிடும். எனவே ஜெயங்கொண்டம்- செந்துறை சாலையில் உள்ள தெற்கு புதுக்குடி கிராமத்தில் சுகாதார நிலையம் அமைக்கப்பட்டால் அனைவரும் பயனடைவர் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
சமூக ஆர்வலர் கணேசன் அளித்த மனு: அரியலூரில் இருந்து தினமும் மாலை 5.20 மணிக்கு புறப்பட்டு திட்டக்குடி வரை செல்லும் அரசு பேருந்து ஞாயிற்றுக்கிழமையில் இருந்து 4.35 மணிக்கு புறப்படும் செல்லும் என்று போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்தாக கூறப்படுகிறது. இதனால் பணியாளர்களும், மாணவ மாணிகளும் தங்களது வீட்டுக்கு குறிப்பிட்ட நேரத்துக்கு செல்ல முடியாமல் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே மீண்டும் அதே நேரத்தில் அந்த அரசு பேருந்தை இயக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.