பாடாலூர், ஜூன் 12:கொட்டரை அரசு பள்ளியில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் சாதனை புரிந்த மாணவ, மாணவிகளை பொன்னாடை போர்த்தி கவுரவித்தனர். பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா கொட்டரை கிராமத்தில் அரசு உயர்நிலைப் பள்ளி உள்ளது. இப்பள்ளி 2023 -24 கல்வியாண்டில் 10-ம் வகுப்பு தேர்வில் 100 சதவீத தேர்ச்சி பெற்றது. தேர்வு எழுதிய 17 மாணவ, மாணவிகளும் தேர்ச்சி அடைந்தனர்.இந்நிலையில் கோடை விடுமுறை முடிந்து நேற்று முன்தினம் பள்ளிகள் திறக்கப்பட்டது.
அப்போது பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு தலைமையாசிரியர் (பொ) செந்தில்குமார் தலைமையில் பாராட்டு விழா நடைபெற்றது. ஒன்றிய கவுன்சிலர் இளவரசு முன்னிலை வகித்தார். தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்கள் அனைவருக்கும் பொன்னாடை அணிவித்து, நினைவு பரிசு வழங்கி கவுரவித்தனர். இதில் ஆசிரியர்கள் குணச்செல்வி, சேசு செல்வகுமார், கார்த்திகேயன், கோபி, இளநிலை உதவியாளர் நிவேதா மற்றும் பள்ளி மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
The post கொட்டரை அரசு பள்ளியில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் சாதனை புரிந்தோர் கவுரவிப்பு appeared first on Dinakaran.