×

காவேரிப்பாக்கம் ஏரி நிரம்புவது எப்போது?விவசாயிகள் எதிர்பார்ப்பு

காவேரிப்பாக்கம் : தமிழகத்தில் செம்பரம்பாக்கம் ஏரி, மதுராந்தகம் ஏரி அடுத்தபடியாக 3வது பெரிய ஏரியாகவும் ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் மிகவும் பிரமாண்ட ஏரியாகவும் விளங்கி வருவது காவேரிப்பாக்கம் ஏரியாகும். இந்த ஏரி 3ம் நந்திவர்மன் பல்லவன் ஆட்சி காலத்தில் கட்டப்பட்டது.ஏரியின் மொத்த பரப்பளவு 3,968 ஏக்கர் ஆகும். ஏரியானது ஒரு முறை நிரம்பி வழியும் காலங்களில் அதன் மொத்த நீர் கொள்ளவு 41.601 மி.க.லிட்டர் கொண்டிருக்கும். இப்படி ஏரி நிரம்பி வழியும் காலங்களில் விவசாயிகள் மூன்று போகம் அறுவடை செய்யலாம்.இந்த ஏரி நிரம்பி வழியும் காலங்களில் நரிமதகு, சிங்கமதகு, மூலமதகு, பள்ளமதகு, உள்ளிட்ட 10 மதகுகள் வாயிலாக கால்வாய் மூலம் தண்ணீர் பெறப்பட்டு 6,278 ஏக்கர் நிலப்பரப்பில் விவசாயம் செய்யப்படுகின்றன.கடந்த 2018-2019ல் ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் பெய்த மழையின் காரணமாகவும், பாலாற்றில் வெள்ளப்பெருக்கு காரணமாகவும், காவேரிப்பாக்கம் அடுத்த அணைக்கட்டு பகுதியில் இருந்து ஏரிக்கு 1,500 கன அடி தண்ணீர் கொண்டு வரப்பட்டு, ஏரியில் 28 அடி அளவுக்கு தண்ணீர் நிரப்பபட்டது. இருப்பினும், ஏரியின் முழு கொள்ளளவான 30.6 அடி உயரத்தை எட்டவில்லை. கடைவாசல் பகுதியில் உள்ள 57 மதகுகள் மற்றும் மகேந்திரவாடி ஏரிக்கு 9 மதகுகள் என 66 மதகுகள் மூலம் 500 கன அடி தண்ணீர் வீதம் திறந்து விடப்பட்டன.இதன் வாயிலாக பெரிவளையம், தர்மநீதி, சிறுவளையம், துறையூர், ரெட்டிவலம், தென்மாம்பாக்கம், வேட்டாங்குளம், புன்னை உள்ளிட்ட 41 ஏரிகள் பயனடைகின்றன.ஆந்திரா, கர்நாடக உள்ளிட்ட மாநிலங்களில் அதிகளவில் மழை பொழிவின் காரணமாக பொன்னை ஆறு மற்றும் பாலாற்றில் கடந்த 2 நாட்களாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது.இதனால், வாலாஜா அணைக்கட்டு பகுதியில் இருந்து, காவேரிப்பாக்கம் ஏரிக்கால்வாய், மக்கிலியன் கால்வாய், சக்கரமல்லூர் கால்வாய், கலவை மற்றும் தூசி மாமண்டூர் கால்வாய் உள்ளிட்ட பகுதிகளுக்கு தண்ணீர் பிரித்து அனுப்பப்பட்டு வருகின்றன.இந்நிலையில், பாலாறு அணைக்கட்டு பகுதியில் இருந்து காவேரிப்பாக்கம் ஏரிக்கு 300 கன அடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. இதனால், ஏரியில் 23 அடி வரை தண்ணீர் நிரம்பி உள்ளது. காவேரிப்பாக்கம் ஏரி கால்வாய் மொத்தம் 1,800 கன அடியாகும். நீர்வரத்து கால்வாயில் உள்ள ஆக்கிரமிப்பு மற்றும் சிதிலமடைந்த பகுதிகள் சீரமைக்கப்பட்டு அதிகாரிகள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். ஏரி நிரம்ப தேவையான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்….

The post காவேரிப்பாக்கம் ஏரி நிரம்புவது எப்போது?விவசாயிகள் எதிர்பார்ப்பு appeared first on Dinakaran.

Tags : Cauverypakkam ,Tamil Nadu ,Sembarambakkam Lake ,Madhuranthakam Lake ,Vellore district ,Cauverypakkam Lake ,Dinakaran ,
× RELATED காவேரிப்பாக்கம் அருகே கோடை வெயில்...