×

திருவேற்காடு அருகே கூவம் ஆறு ஆக்கிரமிப்பு வீடுகள் இடிப்பு: பெண்கள் கதறல்

பூந்தமல்லி, ஜூன் 25 : திருவேற்காடு பகுதியில் கூவம் ஆற்றில் கட்டப்பட்டிருந்த வீடுகள் இடிக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள், தெருவில் புரண்டு கதறியதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை திருவேற்காடு வேலப்பன்சாவடி ஆற்றங்கரை தெருவில், கூவம் ஆற்றை ஆக்கிரமித்து 40 வீடுகள் கட்டப்பட்டிருந்தது. நீதிமன்ற உத்தரவின்படி சில மாதங்களுக்கு முன் கூவம் ஆற்றில் கட்டப்பட்டிருந்த 30 வீடுகள் அகற்றப்பட்டன. 8 வீடுகளின் உரிமையாளர்கள் நீதிமன்றத்தில் தடையாணை பெற்றிருந்ததால் அந்த வீடுகளை இடிக்க முடியவில்லை. இந்தநிலையில், இவ்வழக்கை விசாரித்த நீதிபதி, ‘நீர்நிலைகளை ஆக்கிரமித்து கட்டப்பட்ட 8 வீடுகளை இடிக்கலாம்’ என்று உத்தரவிட்டார்.

இதையடுத்து கலெக்டர் உத்தரவின்படி பூந்தமல்லி வட்டாட்சியர் புனிதவதி தலைமையில் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் நேற்று காலை பொக்லைன் இயந்திரத்துடன் சம்பவ இடத்துக்கு சென்றனர். கூவம் ஆற்றை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த வீடுகளை இடிக்க முயன்றபோது, அதன்  உரிமையாளர்கள், அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதையும் மீறி வீடுகள் இடிக்கப்பட்டதால் தெருவில் உருண்டுபுரண்டு கதறி அழுதனர். இதனால் பரபரப்பு நிலவியது. தாசில்தார் புனிதவதி கூறுகையில், “கலெக்டர் உத்தரவின்பேரில் நீர்நிலையில் கட்டப்பட்டிருந்த 8 வீடுகள் இடிக்கப்பட்டுள்ளன. இவர்களுக்கு பெரும்பாக்கத்தில் குடிசை மாற்று வாரிய கட்டித்தில் வீடுகள் ஒதுக்கப்பட்டுள்ளன. ஏற்கனவே இங்கிருந்து வீடுகளை காலி செய்து சென்றவர்கள் பெரும்பாக்கத்தில் வசித்து வருகின்றனர்” என்றார்.

Tags : Demolition ,Koovam River Occupancy Houses ,Women ,Thiruvenkadu ,
× RELATED கடலூரில் சிறுவன் இயக்கிய ஆம்புலன்ஸ் மோதி விபத்து: 2 பெண்கள் காயம்