×

உளுந்தூர்பேட்டை அருகே கார் மீது மினிலாரி மோதி விபத்து வாலிபர் பலி, 4 பேர் படுகாயம்

உளுந்தூர்பேட்டை, ஜூன் 21:உளுந்தூர்பேட்டை அருகே கார் மீது மினிலாரி மோதி விபத்துக்குள்ளானதில் வாலிபர் பலியானார். 4 பேர் படுகாயம் அடைந்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சேலம் மாவட்டம் பகல்பட்டி பகுதியை சேர்ந்தவர் வாசுதேவன் மகன் சபரிநாதன் (24). இவர் நேற்று ஒரு காரில் சேலத்தில் இருந்து சென்னை நோக்கி சென்று கொண்டிருந்தார். அந்த காரில் ராஜேந்திரன் மனைவி சாந்தி (55), கிஷோர் (20) ஆகியோரும் வந்துள்ளனர். இந்த கார் நேற்று மாலை உளுந்தூர்பேட்டை அடுத்த எலவனாசூர்கோட்டை புறவழிச்சாலையில் சென்று கொண்டிருந்த போது, அந்த வழியாக சென்னையில் இருந்து ஈரோடு நோக்கி சென்ற மினிலாரி கார் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் கார் மற்றும் மினிலாரியின் முன்பகுதி முற்றிலும் சேதமடைந்ததுடன் காரில் வந்த சபரிநாதன் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார். மேலும் சாந்தி, கிஷோர் மற்றும் மினிலாரியை ஓட்டி வந்த சீனு (47), அவருடன் வந்த ராஜா (30) ஆகிய 4 பேர் படுகாயம் அடைந்தனர். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த எலவனாசூர்கோட்டை போலீசார் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  

Tags : Ulundurpet ,
× RELATED உரிய பாதுகாப்பின்றி எடுத்து...