நாமக்கல், ஜூன் 13: நாமக்கல்லில் குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு தின விழிப்புணர்வு பேரணி மற்றும் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
நாமக்கல் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில், நேற்று குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தின விழிப்புணர்வு பேரணி மற்றும் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, கலெக்டர் ஆசியா மரியம் தலைமை தாங்கி, விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து துவக்கி வைத்தார். நாமக்கல் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் தொடங்கிய பேரணி பரமத்தி ரோடு, உழவர் சந்தை, மணிக்கூண்டு, திருச்சி ரோடு, பிஎஸ்என்எல் அலுவலகம் வழியாக சென்று, மீண்டும் அரசு மருத்துவமனையை வந்தடைந்தது. இந்த பேரணியில் தனியார் கல்லூரியை சேர்ந்த 150க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டு, விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி சென்றனர்.
பின்னர், குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு உறுதிமொழியை கலெக்டர் வாசிக்க, அதை அரசுத்துறை அலுவலர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் ஏற்றுக்கொண்டனர். இந்நிகழ்ச்சியில் நாமக்கல் சப் கலெக்டர் கிராந்திகுமார்பதி, தொழிலாளர் உதவி ஆணையர் மாதேஸ்வரன், துணை ஆய்வாளர் திருஞானசம்பந்தம், உதவி ஆய்வாளர்கள் சுதா, சாந்தி, கோமதி, மாயவன், விஜய், ராஜசேகர், தேசிய குழந்தை தொழிலாளர் திட்ட இயக்குநர், அந்தோணி ஜெனிட், நாமக்கல் தாசில்தார் சுப்ரமணியம் உட்பட அனைத்துத்துறை அலுவலர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.
கையெழுத்து இயக்கத்துக்கு ஆதரவில்லை:
குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தினத்தையொட்டி, நாமக்கல் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டது. இதற்காக பிளக்ஸ் போர்டு வைக்கப்பட்டிருந்தது. இதில் கலெக்டர் ஆசியாமரியம், சப் கலெக்டர் கிரந்திகுமார்பதி மற்றும் இருவர் மட்டுமே கையெழுத்திட்டனர். ஆனால், விழாவில் பங்கேற்ற அரசுத்துறை அலுவலர்கள், அரசு மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் உள்ளிட்ட யாருமே, கையெழுத்திட ஆர்வம் காட்டவில்லை.