கள்ளக்குறிச்சி, ஜூன் 12: தியாகதுருகம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவிகள், 6 மற்றும் 7 வது வார்டு மக்கள் பயன்படுத்தும் விதமாக தியாகதுருகம் பேரூராட்சி நிர்வாகத்தின் சார்பில் மகளிர் பள்ளி கூடம் அருகில் ஆழ்குழாய் கிணறுடன் மினிடேங்க் அமைக்கப்பட்டது. அந்த மினி டேங்கில் இருந்து விநியோகிக்கப்படும் குடிநீரை அப்பகுதி மக்கள் மற்றும் பள்ளி மாணவிகள் பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில் கடந்த 3 மாதத்திற்கு முன்பு ஆழ்குழாய் கிணற்றில் உள்ள மின்மோட்டார் பழுதானது. ஆனால் இதுவரை மின்மோட்டார் சரிசெய்யப்படவில்லை. இதனால் பள்ளியில் மதிய உணவு சாப்பிடும் மாணவிகள் குடிப்பதற்கு தண்ணீர் கிடைக்காமல் அவதிப்படுகின்றனர். மேலும் அதே பகுதியில் வசித்து வரும் மக்களும் தண்ணீர் கிடைக்காமல் அவதிப்பட்டு வருகின்றனர். வசதி படைத்த மக்கள் விலைக்கு தண்ணீர் வாங்கி பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் விலைக்கு தண்ணீர் வாங்க முடியாத ஏழை எளிய மக்கள், வெகு தூரம் சென்று தண்ணீர் எடுத்து வந்து பயன்படுத்தி வருகின்றனர். பழுதடைந்த மின்மோட்டாரை சரி செய்யக்கோரி தியாகதுருகம் பேரூராட்சி செயல் அலுவலர் (பொறுப்பு) ஜெயராமனிடம் அப்பகுதி மக்கள் பலமுறை புகார் தெரிவித்துள்ளனர். ஆனால் பிரச்னையை தீர்க்க இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காமல் செயல்அலுவலர் அலட்சியம்காட்டி வருவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். எனவே இனியாவது பழுதடைந்த மின்மோட்டாரை பழுது நீக்கம் செய்து பள்ளி மாணவிகளின் குடிநீர் தாகத்தை போக்கிட மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.