பொன்னேரி, ஜூன் 12 : மீஞ்சூர் அருகே பட்டப்பகலில் மின்வாரிய ஊழியர் வீட்டில் 20 சவரன் நகை 12 லட்சம் பணம் கொள்ளை போன சம்பவம் அப்பகுதி மக்களை பீதியில் ஆழ்த்தியுள்ளது. மீஞ்சூர் அடுத்த நாலூர் கேசவபுரம் ஏரிக்கரை பகுதியில் வசித்து வருபவர் சங்கர் (45), சென்னையில் மின்வாரிய ஊழியராக வேலை செய்து வருகிறார். இவரது மனைவி உமாதேவி (40), மகன் மோகன் (22). உமாதேவி நாலூர் ஏரிக்கரை பகுதியில் பெட்டிக் கடை நடத்தி வருகிறார். நேற்று காலை வீட்டை பூட்டிக்கொண்டு உமாதேவி கடைக்கு சென்றார். வியாபாரத்தை கவனித்துக்கொண்டிருந்த அவரது மகன் மோகன் மதிய உணவுக்காக வீட்டிற்கு சென்றார். அப்போது பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் வைக்கப்பட்டு இருந்த பொருட்கள் சிதறிக் கிடந்தது. உடனடியாக மோகன், தாய் உமாதேவிக்கும், தந்தை சங்கருக்கும் தொலைபேசியில் தகவல் தெரிவித்தார். அவர்கள் வந்து பார்த்துவிட்டு பீரோவில் இருந்த 20 சவரன் நகை, ரொக்கப்பணம் 12 லட்சம் கொள்ளை போனது தெரியவந்தது. இது குறித்த புகாரின்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரித்தனர். இது பற்றி பொதுமக்கள் கூறுகையில், ‘’இப்பகுதிகளில் போலீசார் ரோந்து வருவதில்லை. தொலைபேசியில் தகவல் தெரிவித்தாலும் கண்டு கொள்வதில்லை. இதனால் திருட்டு பயத்தில் உறைந்து போயுள்ளோம் என தெரிவித்தனர்.