திருமலை, ஜூன் 12: கல்யாண வெங்கடேஸ்வரர் சுவாமி கோயிலில் மகா கும்பாபிஷேகத்தையொட்டி அஷ்டபந்தன மூலிகை கலவை சமர்ப்பணம் செய்யப்பட்டது. மேலும் யாக சாலையில் சிறப்பு பூஜைகள் தொடங்கியது. திருப்பதி அடுத்த சீனிவாசமங்காபுரத்தில் உள்ள கல்யாண வெங்கடேஸ்வர சுவாமி கோயிலில் அஷ்டபந்தன பாலாலய மகா கும்பாபிஷேகம் நாளை நடக்கிறது. இதையொட்டி நேற்று இணை செயல் அலுவலர் லட்சுமிகாந்தம் தலைமையில் அர்ச்சகர்கள் விஷ்வ சேனாதிபதி ஆராதனை, சங்கல்ப பூஜை நடத்தினர். பின்னர் முகமண்டபத்தில் அஷ்டபந்தன மூலிகை கலவை தயார் செய்யப்பட்டு தங்கம், நவரத்தினம் ஆகியவை மூலமூர்த்தியின் பாதத்திற்கு கீழ் கொண்டு சென்று சமர்ப்பிக்கப்பட்டது. தொடர்ந்து யாகசாலையில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
இன்று மாலை 3.30 மணி முதல் 5.30 மணி வரை மூலவருக்கு மகா சாந்தி அபிஷேகம் நடக்கிறது. நாளை அதிகாலை 5 மணி முதல் 7 மணி வரை யாக பூர்ணாஹுதி பூஜை செய்யப்பட உள்ளது. பின்னர் 7.30 மணி முதல் 9 மணி வரை மகா கும்பாபிஷேகம் நடக்கிறது. அன்று மாலை 5 மணி முதல் 6 மணி வரை ஊஞ்சல் சேவையும் இரவு 7 மணி முதல் 8 மணிவரை பெரிய சேஷ வாகனத்தில் சுவாமி வீதி உலாவும் நடைபெற உள்ளது. இதில் துணை செயல் அலுவலர் தனஞ்செயலு, பிரதான கங்கன பட்டர் சீதா ராமசார்யலு, உதவி செயல் அலுவலர் லட்சுமய்யா, பிரதான அர்ச்சகர் பாலாஜி ரங்காச்சார்யலு, கண்காணிப்பாளர் செங்கல் ராயலு உட்பட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.