மணமேல்குடி, ஜூன்11: மணமேல்குடி பகுதியில் பள்ளியில் படிக்கும் மாணவர்களின் குடும்ப பொருளாதார சூழ்நிலை காரணமாக கல்லூரி கனவு நிறைவேறவும் இப்பகுதியில் அரசு கலை அறிவியல் கலலூரி அமைக்கப்பட வேண்டும் என மாணவ, மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் அறந்தாங்கியை அடுத்து பெரியநகரமாகவும், தாலுகாவாகவும் மணமேல்குடி உள்ளது. 28 ஊராட்சிகளை சேர்ந்த 500க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. மேலும் இங்கு ஊராட்சி ஒன்றிய அலுவலகம், தாசில்தார் அலுவலகம், மருத்துவமனை, காவல் நிலையம், சார்பதிவாளர் அலுவலகம் உள்ளிட்ட அரசு அலுவலகங்கள் உள்ளன.
இங்கு அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் இருந்து வருடம்தோறும் 12ம் வகுப்பு முடித்து கல்லூரி கனவுகளுடன் 1000த்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் வருகின்றனர். ஆனால் இப்பகுதியில் அரசு சார்பில் இதுவரை எந்தவிதமான கலைக்கல்லூரியோ தொழில் நுட்ப கல்லூரியோ ஏற்படுத்தவில்லை. 50 கி.மீ தூரம் உள்ள அரசு கல்லூரிக்கு சென்றுவர பஸ்வசதி, பணவசதி இல்லாததாலும், இதனால் தனியார் கல்லூரிகளில் கட்டணம் செலுத்திபடிக்க முடியாததாலும்; இப்பகுதியை சேர்ந்த கிராமப்புற மாணவர்கள் பள்ளி படிப்பை முடித்தவுடன் கல்லூரி கனவை மூட்டை கட்டி வைத்து விட்டு கட்டிட வேலைகள் கடைகளுக்கு வேலைக்கு சென்று விடுகின்றனர்.
மணமேல்குடி தாலுகாவுக்கு உட்பட்ட நகர கிராமபுற மாணவர்கள் மேல்நிலை கல்வியை முடித்துவிட்டு கல்லூரி படிப்பை தொடர வேண்டுமானால் இங்கிருந்து 50 கி.மீ தூரம் உள்ளபுதுக்கோட்டைதான் செல்லவேண்டும் அப்படியே சென்றாலும் அனைவருக்கும் அரசு கல்லூரியில் இடம் கிடைக்குமா என்பது கேள்விகுறிதான் மேலும் பேருந்துகளில் அதிக தூரம் செல்லவேண்டியுள்ளதால் பொருளாதாரத்தில் பின் தங்கியுள்ள மாணவர்கள் கல்லூரி செல்ல முடியாமல் படிப்பை கைவீடும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.
இதுகுறித்து பெற்றோர்கள் கூறியதாவது: மணமேல்குடி பகுதி வானம் பார்த்த விவசாயமாகும். தற்போது தொடர்ச்சியாக பருவமழை பொய்த்து போனதால் கடும் வறட்சி நிலவி வருகிறது. இதனால் விவசாயம் செய்ய முடியாமல் விவசாயிகள் மிகவும் பாதிப்படைந்து வருகின்றனர். இந்நிலையில், தங்கள் குழந்தைகளின் பள்ளி படிப்பிற்குகூட செலவு செய்ய முடியாத நிலையில் உள்ளனர். இந்நிலையில் மணமேல்குடி பகுதியில் அதிகளவில் உள்ள அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகள் கல்லூரி படிப்பிற்காக புதுக்கோட்டைதான் செல்லவேண்டும். அப்படி செல்லும் மாணவர்கள் பொருளாதார நெருக்கடியால் கல்லூரிக்கு செல்ல முடியாத சூழ்நிலை உள்ளது. எனவே மாணவ, மாணவிகளின் நலனின் அக்கறை கொண்டு மணமேல்குடியில் அரசு கலை அறிவியல் கலலூரி அமைக்கப்பட வேண்டும் என பெற்றோர் மற்றும் மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.