திருமயம், ஜூன் 11: திருமயம் அருகே பைக்குகள் நேருக்கு நேர் மோதி கொண்ட விபத்தில் வங்கி ஊழியர் பரிதாபமாக உயிரிழந்தார். சிவகங்கை மாவட்டம் ஆத்தங்குடியை சேர்ந்த சாத்தப்பன் மகன் முத்துராமன் (35). இவர் திருமயம் அருகே உள்ள பனையப்பட்டி இந்தியன் வங்கியில் பணியாற்றி வந்தார். இந்நிலையில் நேற்று காலை வழக்கம்போல் திருமயம் வழியாக வங்கிக்கு வேலைக்கு பைக்கில் சென்றார். அப்போது திருமயம் அடுத்த கருப்பர் கோயில் அருகே சென்றபோது எதிர்பாராதவிதமாக எதிரே வந்த பைக் மீது மோதியது. இதில் நிலைதடுமாறி முத்துராமன் கீழே விழுந்ததில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அருகில் இருந்தோர் முத்துராமனை மீட்டு திருமயம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி முத்துராமன் பரிதாபமாக உயிரிழந்தார். இது சம்பந்தமாக நெய்கோணத்தை சேர்ந்த பாண்டி செல்வத்தை பனையப்பட்டி போலீசார் பிடித்து விசாரித்து வருகின்றனர்.