திருவேங்கடம், ஜூன் 7: திருவேங்கடம் அருகே கலிங்கப்பட்டி மேலத்தெருவைச் சேர்ந்த பழனிசாமி மகன் மணிகண்டன்(34), தச்சு தொழிலாளி. இவரது மனைவி சுபசங்கரேஸ்வரி(27), மகன் ராஜா(6) ஆகியோருடன் திருவேங்கடம் என்ஜிஓ காலனியில் வசித்து வந்தார். நேற்று முன்தினம் இரவு பாறைப்பட்டியில் ஒரு வீட்டில் வேலை முடிந்து பைக்கில் நள்ளிரவு 1.30 மணியளவில் திரும்பி வந்து கொண்டிருந்தார். முத்துரெட்டிபட்டி கோழிப்பண்ணை அடுத்த பாலத்தின் அருகில் வரும் போது மெயின் ரோட்டில் மானூர் கூட்டு குடிநீர் திட்ட குழாய் உடைப்பை சரிசெய்ய தோண்டிய மண் குவியலில் பைக் சிக்கி தூக்கி வீசப்பட்ட மணிகண்டன் அருகில் ஓடையில் தேங்கி கிடந்த நீரில் தலைகுப்புற விழுந்து உயிருக்கு போராடியுள்ளார். நள்ளிரவு என்பதால் விபத்து நடந்தது யாருக்கும் தெரியவில்லை. மறுநாள் காலை அவ்வழியாக வந்தவர் பார்த்து தகவல் கொடுத்துள்ளார். கரிவலம்வந்தநல்லூர் போலீசார் உடலை கைப்பற்றி சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.