உடுமலை, ஜூன் 7:உடுமலை அருகே உள்ள கொழுமம் பகுதியில் அமராவதி ஆற்றுப்படுகையில் சிலர் பன்றிகளை வளர்த்து வருகின்றனர். ஆற்றில் தற்போது தண்ணீர் வராததால், அங்கு ‘ஷெட்’ அமைத்து ஏராளமான பன்றிகளை வளர்க்கின்றனர். முன்பு ஆற்றுக்கு அருகில் உள்ள பகுதியில் வளர்த்து வந்தனர். இதற்கு எதிர்ப்பு கிளம்பிய நிலையில், ஆற்றுக்குள்ளேயே பன்றி வளர்க்க துவங்கி உள்ளனர். இதனால் அப்பகுதியில் சுகாதார கேடு ஏற்படுகிறது. மேலும் இந்த பன்றிகள் அவ்வப்போது அருகில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் சுற்றி திரிகின்றன. இதனால் வீதிகளில் பன்றி கழிவுகளாக கிடக்கின்றன. மேலும் பன்றிகள் கூட்டம் கூட்டமாக சத்தமிட்டு திரிவதாலும், சண்டையிடுவதாலும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுகிறது. பன்றிகளால் நோய் பரவும் அபாயம் உள்ளதால், இப்பகுதியில் பன்றி வளர்ப்புக்கு தடை விதிக்க வேண்டும் அல்லது மக்கள் நடமாட்டம் இல்லாத வேறுபகுதியில், பாதுகாப்பான முறையில் வளர்க்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.