ஊட்டி, ஜூன் 7: கடந்த மே மாதம் ரமலான் பண்டிகைக்கான நோன்பு காலம் துவங்கிய நிலையில், கேரள மாநிலத்தில் இருந்து ஊட்டி வரும் சுற்றுலா பயணிகள் கூட்டம் வெகுவாக குறைந்து காணப்பட்டது. அதேபோல், கர்நாடக மாநிலத்தில் இருந்தும் வரும் சுற்றுலா பயணிகள் கூட்டம் குறைந்தே காணப்பட்டது. இந்நிலையில், நேற்று முன்தினம் ரமலான் பண்டிகை கொண்டாடப்பட்ட நிலையில், தற்போது கேரள மாநில சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது. நேற்று ஊட்டியில் உள்ள அனைத்து சுற்றுலா தலங்களிலும் கேரள மாநில சுற்றுலா பயணிகள் கூட்டமே அதிகம் காணப்பட்டது. குறிப்பாக, இஸ்லாமிய மக்களின் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. அதேபோல், கர்நாடக மாநிலத்தில் இருந்தும் அதிகளவு சுற்றுலா பயணிகள் வரத்துவங்கியுள்ளனர். இதனால், தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, படகு இல்லம், தொட்டபெட்டா, பைக்காரா நீர் வீழ்ச்சி மற்றும் படகு இல்லத்தில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகளவு காணப்பட்டது.