×

சண்டையை விலக்கி விட முயன்ற போலீஸ்காரர் மண்டை உடைப்பு

திருவொற்றியூர்: திருவொற்றியூர் ராஜா சண்முகம் நகரை சேர்ந்தவர் ராஜா (45). கூலி தொழிலாளி. இவரது மனைவி சரளா (40). இவர்களின் மகன் சுபாஷ் (22). நேற்று முன்தினம் இரவு ராஜா தனது மனைவி மற்றும் மகனுடன் ஆட்டோவில் உறவினர் வீட்டுக்கு புறப்பட்டார். சத்தியமூர்த்தி நகர் அருகே சென்றபோது, எதிரே ஒரே பைக்கில் வந்த 3 பேர், ராஜா குடும்பத்தினர் சென்ற ஆட்டோ மீது மோதினர். இதனால் கோபமடைந்த ராஜா, ஆட்டோவில் இருந்து இறங்கி வந்து அவர்களை தட்டிக்கேட்டுள்ளார்.

அப்போது, அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதை பார்த்து அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த சாத்தாங்காடு காவல் நிலைய போலீஸ்காரர் ஜெகதீஷ், சம்பவ இடத்துக்கு  சென்று அவர்களின் சண்டையை விலக்கி விட்டுள்ளார். ஆனால், ராஜா குடும்பத்தினர் போலீஸ்காரர் ஜெகதீஷை வேகமாக கீழே தள்ளிவிட்டு மீண்டும் சண்டையிட்டுள்ளனர். கீழே விழுந்த அவருக்கு மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது. அப்போது, அவ்வழியே ரோந்து பணியில் ஈடுபட்ட சாத்தங்காடு போலீசார், ராஜா, அவரது மனைவி சரளா, மகன் சுபாஷ் ஆகியோரை பிடித்து காவல் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். செல்லும் வழியில் ராஜா மட்டும் தப்பி ஓடிவிட்டார். விசாரணையில், ராஜா மற்றும் அவரது மனைவி மது போதையில் இருந்தது தெரிந்தது. இதையடுத்து சரளா, சுபாஷ் ஆகியோரை கைது செய்தனர். ராஜாவை தேடி வருகின்றனர்.

Tags : policeman ,fight ,
× RELATED டெல்லி விவசாயிகள் போராட்டத்தின் போது...