×

நேர்முக தேர்வுக்கு சென்ற வாலிபர் பரிதாப பலி

வேப்பூர், ஜூன் 5: தஞ்சாவூர் மாவட்டம், மயிலாடுதுறை அடுத்த சோழசக்கர நல்லூர் அருகிலுள்ள பெரியநாகங்குடி பகுதியை சேர்ந்தவர் கலியமூர்த்தி மகன் மணிகண்டன்(30). இவர் திருச்சியில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் சென்னையில் நடைபெற உள்ள நேர்முக தேர்வில் கலந்து கொள்ள தனது இருசக்கர வாகனத்தில் நேற்று முன்தினம் இரவு திருச்சியில்இருந்து சென்னை நோக்கி சென்றார். நள்ளிரவில் கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகிலுள்ள சேப்பாக்கம் மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்த போது நிலைதடுமாறி கீழே விழுந்தார். இதில் பலத்த காயமடைந்த மணிகண்டனை அக்கம்பக்கத்தினர் மீட்டு விழுப்புரம் முண்டியம்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் இறந்தார். இது குறித்து வேப்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மற்றொரு விபத்து: பெரம்பலூர் பகுதியை சேர்ந்தவர் செல்வராசு (48). இவரது மகன் மகேஷ்(26). இவர்கள் இருவரும் தங்களது காரில் நேற்று முன்தினம் இரவு பெரம்பலூரிலிருந்து சென்னை நோக்கி சென்றனர். கடலூர் மாவட்டம், வேப்பூர் தனியார் பாலிடெக்னிக் கல்லூரி அருகே விடியற்காலை சென்ற போது கார் மீது லாரி மோதியது. இதில் பலத்த காயமடைந்த செல்வராசை முண்டியம்பாக்கம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலும், மகேசை உளுந்தூர்பேட்டை மருத்துவமனையிலும் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.  இது குறித்து வேப்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : victim ,interviews ,
× RELATED செல்போன் எண்ணை எழுத சொல்லிவிட்டு...