×

திருமயம் அருகே சேதமடைந்த சாலையால் மக்கள் கடும் அவதி

திருமயம், ஜூன் 4: திருமயம் அருகே 10 வருடங்களுக்கு மேலாக பழுதடைந்து கிடக்கும் சாலையை சரி செய்ய அதிகாரிகளிடம் கெஞ்சிக்கெதறி போராடியும் இதுவரை நடவடிக்கை இல்லை என அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள ராயவரத்தில் இருந்து கானப்பூர், கொத்தமங்களம் வழியாக காரைக்குடி செல்லும் முக்கிய சாலை கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் செப்பனிடப்பட்டது. இது புதுக்கோட்டை-சிவகங்கை மாவட்டத்தை இணைக்கும் முக்கிய சாலை என்பதால் வாகன போக்குவரத்து நிறைந்து காணப்படும். மேலும் ராயவரம், செங்கீரை, பெருங்குடி, முனசந்தை, ஆயிங்குடி உள்ளிட்ட 50 மேற்பட்ட கிராம மக்கள் இந்த சாலை வழியாக தான் காரைக்குடி செல்ல வேண்டும். தினந்தோறும் நூற்றுக்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரி மாணவிகள் இந்த சாலையை கடக்கின்றனர்.

இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளாக சாலையில் உள்ள ஜல்லி கற்கள் பெயர்ந்த சாலையின் பெரும் பகுதி குண்டும், குழியுமாக மாறி கரடு முரடாக காட்சியளிக்கிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பள்ளி மாணவர்கள் சாலையை கடக்க பெரும் சிரமப்படுகின்றனர். வாகன ஓட்டிகள் எதிரே கனரக வாகனங்கள் வரும் போது சாலையை கடக்க பெரும் சிரமப்படுகின்றனர். இதனால் விபத்து நடக்க அதிக வாய்ப்புள்ளது. ராயவரத்தில் இருந்து சிவகங்கை மாவட்டம் எல்லை வரை செல்லும் சுமார் 7 கிலோமீட்டர் கரடுமுரடாக மாறிய நிலையில் இதனை தொடரும் சிவகங்கை மாவட்ட எல்லைக்குட்பட்ட சாலை நன்கு பராமரிக்கப்பட்டு வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் புதுக்கோட்டை மாவட்டத்திற்குட்பட்ட ராயவரம்-காரைக்குடி சாலையை உடனே செப்பணிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். ராயவரம்-காரைக்குடி சாலையை சீரமைக்க அப்பகுதி மக்கள் அரசியல்வாதிகள், அரசு அதிகள் உள்ளிட்ட அனைவரிடமும் முறையிட்டனர். அப்போது நடவடிக்கை எடுப்பதாக மக்களிடத்தில் தெரிவிப்பதோடு சரி அதன் பிறகு சாலை சீரமைப்பதில்எந்த ஒரு முன்னேற்றமும் இல்லை. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் இரண்டு முறைக்கு மேல் சாலை மறியல் செய்தனர். அதற்கும் அதிகாரிகள் செவி சாய்க்கவில்லை. இதனால் அப்பகுதி மக்கள் சேதமடைந்த சாலையை சரி செய்ய கெஞ்சியும், போராடியும் பயனில்லை என வேதனை தெரிவித்தனர்.

Tags : roads ,Thirumai ,
× RELATED சாலை விரிவாக்க பணிக்காக மரங்கள்...