×

வீடு கட்டும் தகராறில் விபரீதம் மகன் அடித்துக்கொலை: தந்தை கைது

சென்னை: புதிய வீடு கட்டுவதில் ஏற்பட்ட தகராறில் மகனை உருட்டுக் கட்டையால் அடித்து கொன்ற தந்தையை போலீசார் கைது செய்தனர். கும்மிடிப்பூண்டி அடுத்த பெரவள்ளூர் பகுதியை சேர்ந்தவர் ரவி (61). விவசாயி. இவரது மனைவி ஜெயலட்சுமி (52). இவர்களுக்கு 3 மகன்கள். முதல் மகன் ஹரிதாஸ் (35) என்பவருக்கு திருமணமாகிவிட்டது. சோழவரம் அருகே இருளிப்பட்டு  பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் பணியாற்றி வந்தார். இவர்கள் அனைவரும் கூட்டு குடும்பமாக வசித்து வந்தனர்.
இந்நிலையில், பிரதம மந்திரியின் ஆவாஷ் யோஜனா திட்டத்தில் இவர்களுக்கு பெரவள்ளூர் பகுதியில் வீடு கட்டிக் கொடுக்கப்படுகிறது. இதுசம்பந்தமாக தந்தைக்கும், மகனுக்கும் பிரச்னை இருந்துள்ளது.இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு மீண்டும் ஹரிதாசுக்கும், ரவிக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது ரவி, ‘‘மகனை பார்த்து நீ தனிக்குடித்தனம் சென்றுவிடு’’ என்று எச்சரித்ததாக கூறப்படுகிறது.

இதனால் இருவருக்கும் இடையே மேலும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த  ரவி,  வீட்டில் கிடந்த உருட்டுக்கட்டையை எடுத்து மகன் ஹரிதாசை சரமாரியாக அடித்துள்ளார்.இதில் தலையில் பலத்த காயமடைந்த  ஹரிதாஸ் மயங்கி விழுந்தார். இதை பார்த்த ரவி அங்கிருந்து தப்பியோடினார். உயிருக்கு போராடிய ஹரிதாசை  உறவினர்கள் மீட்டு உடனடியாக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள், ஏற்கனவே ஹரிதாஸ் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.இதுகுறித்து தகவல் அறிந்ததும் கவரப்பேட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து ஹரிதாசின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், போலீசார் வழக்குப்பதிவு செய்து  ரவியை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.வீடு கட்டும் பிரச்னையில் மகனை அடித்துக்கொன்ற தந்தை கைது செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags :
× RELATED ₹621 கோடி மதிப்பீட்டில், 3...