அரவக்குறிச்சி, மே30: அரவக்குறிச்சி இடைத்தேர்தலுக்கான நடைமுறைகள் முடிவடைந்தது. வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் நிம்மதியடைந்தனர்.கரூர் மக்களவை தேர்தல், அரவக்குறிச்சி சட்டமன்ற இடைத் தேர்தல் அறிவிக்கப் பட்டதால் அரவக்குறிச்சி தொகுதியில் 2 மாதங்களாக தேர்தல் நடைமுறைகள் அமலில் இருந்தது. இதனால் ரூ. 50 ஆயிரத்திற்கு மேல் உரிய ஆவணம் இல்லாமல் கொண்டு செல்லக் கூடாது என்ற நிலை இருந்தது. அரவக்குறிச்சி பகுதியில் பிரபலமான முருங்கையை விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யும் மொத்த வியாபார மையங்கள் அதிக அளவில் உள்ளன. இங்கு முருங்கை கொள்முதல் செய்ய பல்வேறு பகுதிகளிலிருந்து வியாபாரிகள் இங்கு வருவார்கள், ரூ50 ஆயிரத்திற்கு மேல் கொண்டு வர முடியாமல் இவர்கள் மிகவும் சிரமப்பட்டனர். இதனால் மொத்த வியாபாரிகளிடமிருந்து கொள்முதல் குறைந்து இப்பகுதியில் முருங்கை வாங்க ஆளில்லாமல் முருங்கை விலை வீழ்ச்சியடைந்தது. ஒரு கிலோ ரூ 30க்கு விற்ற முருங்கை ரூ. 5க்கு விற்றது. மேலும் அரவக்குறிச்சி அருகே மணல் மேட்டில் ஆட்டு சந்தை பிரபலம் இங்கு ஆடு வாங்க வரும் மொத்த வியாபாரிகள், கறிக்கடை உரிமையாளர்களுக்கும் இந்நிலை இருந்து வந்தது. அரவக்குறிச்சி வழியாக குமரியிலிருந்து காஷ்மீர் வரை செல்லும் என்எச் 7 சாலை உள்ளது. இவ்வழியாக பல்வேறு வியாபாரம் உள்ளிட்ட காரணங்களுக்காக பணம் கொண்டு செல் வோரும் இந்த தேர்தல் நடைமுறையினால் அவதிப்பட்டனர். இந்நிலையில் மே 27 ம் தேதி இரவுடன் அரவக்குறிச்சி இடைத் தேர்தலுக்கான நடைமுறைகள் முடிவடைந்தது. இதனால் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் நிம்மதியடைந்தனர்.