சூலூர்,மே30: சூலூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் சுத்தம் செய்யப்படாமல் குப்பைகள் குவிந்து காணப்படுகிறது. நாடு முழுவதும் மக்களவை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில், தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, அப்போதை சூலூர் சட்டமன்ற உறுப்பினர் கனகராஜ், தனது எம்எல்ஏ அலுவலகத்தை தற்காலிகமாக மாற்றிக் கொண்டு, அதை பொதுப்பணித்துறை வசம் ஒப்படைத்தார். இந்நிலையில் கடந்த மார்ச் 21ம் தேதி கனகராஜ் திடீரென காலமானார்.
அதைத் தொடர்ந்து கடந்த 19ம் தேதி சூலூர் சட்டமன்ற தொகுதிக்கு இடைத் தேர்தல் நடைபெற்றது. இதில் போட்டியிட்ட முன்னாள் எம்.எல்.ஏ. கனகராஜின் உறவினர் கந்தசாமி போட்டியிட்டு வெற்றி பெற்றார். தேர்தல் முடிவுகள் வெளியாகி ஒரு வாரம் ஆன நிலையில் எம்.எல்.ஏ.அலுவலகத்தை இன்னும் திறந்து சுத்தப்படுத்தாமல் குப்பைகள் குவிந்து காணப்படுகிறது.
நேற்று சூலூர் எம்.எல்.ஏ.வாக இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற கந்தசாமி பதவி ஏற்றுக் கொண்டார். இருந்தும் எம்.எல்.ஏ அலுவலகத்தை பொதுப்பணித் துறையினர் கண்டுகொள்ளாமல் இருக்கின்றனர் என அதிமுகவினர் புலம்புகின்றனர். பதவியில் இருக்கும் போதே எம்.எல்.ஏ.மரணமடைந்ததால் சூலூர் எம்எல்ஏ அலுவலகத்தை சுத்தம் செய்து, பெயிண்ட் அடித்து, தோஷ நிவர்த்திக்கு பரிகார பூஜை செய்த பிறகே புதிய எம்.எல்.ஏ. அலுவலகத்திற்கு வருவார் என்றும் அவரது கட்சியினர் தெரிவிக்கின்றனர்.